சசிகலா சொத்துக்கள் முடக்கம் : போயஸ்கார்டன் புதிய வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய வருமான வரித்துறை
சென்னை போயஸ்கார்டன் பகுதியில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீடு முடக்கப்பட்டதற்கான நோட்டீஸை வருமான வரித்துறையினர் ஒட்டினர்.
சென்னை: சென்னை போயஸ் கார்டனில் சசிகலா புதிதாக கட்டி வரும் வீட்டில், சொத்துக்களை முடக்கியதற்கான நோட்டிஸை வருமான வரித்துறையினர் ஒட்டி உள்ளனர். முடக்கப்பட்ட சசிகலாவின் ரூ.300 கோடி சொத்துக்கான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸை ஒட்டினர். சிறையில் இருந்து வெளி வந்த பின்னர் புதிய வீட்டில் பால் காய்ச்சி குடியேறலாம் என்று நினைத்த சசிகலா இதனைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
2003 முதல் 2005 வரை பினாமி பெயர்களில் சசிகலா வாங்கிய ரூ.300 கோடி சொத்துக்கள் ஏற்கனவே முடக்கப்பட்டுள்ளது. சென்னை போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் புதிய வீடு உள்ளிட்ட இடங்களில் நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது.
சென்னையின் அதிமுக்கிய வி.வி.ஐ.பி.க்கள் மட்டுமே வசிக்கக் கூடிய பகுதி தான் போயஸ் கார்டன். இங்கு தான் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் அமைந்துள்ளது. அரசியலில் அடியெடுத்து வைப்பதற்கு முன்பாகவே திரைத்துறை மூலம் ஈட்டிய பணத்தை கொண்டு ஜெயலலிதா இந்த வீட்டை வாங்கினார். ஜெயலலிதாவின் உடன் பிறவா சகோதரியாகவும், தோழியாகவும் சுமார் 30 ஆண்டுகாலம் அவருடன் இருந்தவர் சசிகலா.
சசிகலா வாங்கிய மேலும் ரூ.300 கோடி மதிப்புள்ள பினாமி சொத்துகள் முடக்கம்!
சிறைப்பறவை சசிகலா
கடந்த 2017ஆம் ஆண்டு சொத்து குவிப்பு வழக்கின் தீர்ப்பு காரணமாக அவர் இப்போது பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் இருக்கிறார். சசிகலாவின் 4 ஆண்டுகால சிறை தண்டனை இந்த மாதத்துடன் நிறைவடையும் என கூறப்பட்டது. அடுத்த ஆண்டு ஜனவரி மாதம்தான் சசிகலா விடுதலையாவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐடி ரெய்டு
கடந்த 2017ஆம் ஆண்டில் சசிகலா மற்றும் உறவினர்களுக்கு சொந்தமான 180 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் மெகா ரெய்டு நடத்தினர். 2016ஆம் ஆண்டு பண மதிப்பிழப்பு காலகட்டத்தில் ஒன்பது இடங்களை சுமார் 1,600 கோடி ரூபாய் அளவுக்கு வாங்கியிருக்கிறார்கள். பெரம்பூரில் பிரபல சினிமா தியேட்டர், கிழக்குக் கடற்கரை சாலையிலுள்ள பிரபல ரிசார்ட் உள்ளிட்ட ஒன்பது சொத்துகள் இருப்பதையும் கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். ஆனால், இது தொடர்பாக, சசிகலா தரப்பில் மேல்முறையீட்டுக்குப் போயிருக்கிறார்கள். இருந்தாலும், அந்தச் சொத்துகள் முடக்கப்பட்டுள்ளன.
சொத்துக்கள் முடக்கம்
இந்த நிலையில் சசிகலா குடும்பத்தின் மேலும் ரூ 300 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமான வரித்துறை முடக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பினாமி தடுப்பு சட்டத்தின் கீழ் வருமான வரித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கிறது.
போயஸ் கார்டனில் புதிய பங்களா
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லம் எதிரே இருந்த 10 கிரவுண்ட் இடம் சசிகலாவுக்கு சொந்தம் என கூறப்பட்டது. இதன் மதிப்பு ரூ.300 கோடி என கூறப்படுகிறது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் வேதா நிலையத்தை தமிழக அரசு நினைவில்லமாக அறிவித்ததுடன் அரசுடமையாகவும் ஆக்கிக்கொண்டது. இதனால் சிறையில் இருந்து விடுதலையான பிறகு மீண்டும் வேதா நிலையத்தில் சசிகலாவால் தங்க முடியாது என்பதால் தனக்கு சொந்தமான இடத்தில் சசிகலா புதிய பங்களா கட்டி வருகிறார் சசிகலா.
புதிய வீட்டில் நோட்டீஸ்
சசிகலா, இளவரசி ஆகியோர் அந்த வீட்டில் குடியேறுவார்கள் எனக் கூறப்படுகிறது. ஸ்ரீஹரிசந்தனா ரியல் எஸ்டேட்ஸ் என்ற தனியார் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் சி.எம்.டி.ஏ. திட்ட அனுமதி வழங்கியுள்ளது. இந்த புது வீட்டின் முன்புதான் இப்போது நோட்டீஸ் ஒட்டியுள்ளது வருமான வரித்துறை.
அதிர்ச்சியில் சசிகலா
சிறையில் இருந்து வெளியே வந்த உடன் போயஸ் கார்டனில் கட்டப்பட்டு வரும் வீட்டில் பால் காய்ச்சி குடியேறலாம் என்று நினைத்திருந்தார் சசிகலா. இப்போது வருமான வரித்துறை சொத்துக்களை முடக்கி நோட்டீஸ் ஒட்டியுள்ளதால் அதிர்ச்சியடைந்துள்ளார் சசிகலா.