ஜெ. நினைவிடம் மூடல்... சசிகலா வசம் இருக்கும் ஒரே டார்கெட் அதிமுக தலைமை அலுவலகம் மட்டும்?
சென்னை: மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் திடீரென மூடப்பட்ட நிலையில் சசிகலாவிடம் இருக்கும் ஒரே ஒரு வாய்ப்பாக அதிமுக தலைமை அலுவலகம் மட்டுமே இருக்கிறது.
Recommended Video
சிறைவாசத்துக்குப் பின்னர் பெங்களூருவில் ஓய்வு எடுத்து வருகிறார் சசிகலா. அங்கிருந்து அடுத்த வாரம் தமிழகம் வருகை தரும் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்துக்குதான் முதலில் செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது.
ஜெ. நினைவிடம் திடீர் மூடல்
ஆனால் யாருமே எதிர்பார்க்காத வகையில் திடீரென ஜெயலலிதாவின் நினைவிடத்தை தமிழக அரசு மூடி உள்ளது. ஜெயலலிதா நினைவிடத்துக்கு போகும் சசிகலாவை வரவேற்க அமைச்சர்கள் சிலர் செல்லக் கூடும் என தகவல் பரவியிருந்தது. இந்த நிலையில் ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டுள்ளது.
அதிமுக தலைமை அலுவலகம்
இதனால் தற்போதைய நிலையில் சசிகலா வசம் உள்ள மிக முக்கியமான அதிமுகவின் டார்கெட் அதிமுக தலைமை அலுவலகம் மட்டும்தான். ஏற்கனவே அதிமுகவின் கொடியை சசிகலா பயன்படுத்த தொடங்கிவிட்டார். அதிமுக பொதுச்செயலர் என்கிற கோதாவில் அவர் பயன்படுத்துவதாக ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
சசிகலாவுக்கான வாய்ப்பு
அதேபோல் பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை செல்லாது எனவும் சசிகலா ஏற்கனவே வழக்கு தொடர்ந்துள்ளார். இதற்கு அப்பால் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு செல்வதன் மூலம் மட்டுமே தற்போது அந்த கட்சியில் தனக்கான பிடியை சசிகலாவால் உறுதி செய்து கொள்ள வாய்ப்பு உள்ளது.
அதிமுக - அமமுக
இதற்கு எதிராகவும் அதிமுக தரப்பு எந்த நடவடிக்கை எடுக்கப் போகிறது என்பதுதான் பெரும் எதிர்பார்ப்பாக இருக்கிறது. இதனை எதிர்கொள்ளும் முனைப்புடன் அமமுக தரப்பும் தயாராக இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர்.