அதிமுகவில் யாரும் யாரையும் நீக்க முடியாது! ஒரே போடாய் போட்ட சசிகலா? ஓபிஎஸ் ஆதரவு? குழப்பத்தில் ர.ர.!
சென்னை : அதிமுகவில் இருந்து ஓ பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதிமுகவில் எதேச்சதிகாரமாக யாரும் யாரையும் நீக்க முடியாது என சசிகலா அதிரடியாக கூறியுள்ளது ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Recommended Video
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இடையே மோதல் போக்கு தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒற்றைத் தலைமை என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்ற வகையில் நீதிமன்றம் வரை சென்று அதனை முறியடித்தார்.
இதனால் எடப்பாடி பழனிசாமி தரப்பு கடும் அதிர்ச்சியடைந்தது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்படாததால் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலியாகி விட்டது என்றும் அறிவித்தனர்.
பாளையத்தம்மா நீ பாசவிளக்கு! சசிகலா புரட்சிப் பயணத்தில் சாமியாடிய பெண்கள்! கையில் என்ன பாத்தீங்களா?
அதிமுக மோதல்
தற்போது அதிமுகவின் அதிகாரப்பூர்வ பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி இல்லாவிட்டாலும், கட்சியினை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிட்டார் எனவே அக்கட்சியின் முக்கிய பிரமுகர்கள் கூறி வருகின்றனர். அந்த அளவுக்கு கட்சியில் தனது செல்வாக்கை உயர்த்தி வைத்துள்ளார் எடப்பாடி. இந்நிலையில் அடுத்து நடக்கவுள்ள அதிமுக பொதுக்குழுவில் ஓபிஎஸ்ஸை கட்சியில் இருந்து நீக்க திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியானது.
நீக்க முடியாது
அதிமுகவில் இருந்து ஓ.பன்னீர்செல்வத்தை நீக்க எடப்பாடி தரப்பு திட்டமிட்டு அதற்கான சட்ட ஆலோசனைகள், ஆதரவாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி வரும் நிலையில் அதிமுகவில் ஏதேச்சதிகாரமாக யாரும் யாரையும் நீக்க முடியாது என சசிகலா அதிரடியாக கூறியுள்ளது ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. சென்னையை அடுத்த தாமரைப்பாக்கம் பகுதியில் சுற்றுப் பயணம் மேற்கொண்ட சசிகலாவுக்கு ரோஜா மலர் தூவி அதிமுக கொடியுடன் அவரது ஆதரவாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் ஓபிஎஸ் கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்படுவதாக கூறப்படுவது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
சசிகலா அதிரடி
அதற்கு பதிலளித்த பேசிய அவர்,"அதிமுக தலைமை அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்படும் போது நிச்சயம் செல்வேன். அதிமுகவின் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் உருவாக்கிய சட்ட விதிகளின்படி எல்லாம் சரியாகவே நடக்கும். நிச்சயமாக சொல்கிறேன் ஏதேச்சதிகாரம் என்பது அதிமுகவில் நிச்சயம் கிடையாது. இதுவரை கிடையாது. யாரையும் யாரும் அதிமுகவில் இருந்து நீக்க முடியாது. அதுபோல் செய்ய வேண்டும் என யாரும் நினைத்தாலும் அவர்களுக்கு தொண்டர்களே பதிலடி கொடுப்பார்கள்" எனக் கூறியுள்ளார்.
ஓபிஎஸ் உற்சாகம்
கடந்த அதிமுக பொதுக்குழு கூட்டத்தின் போது சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவாக வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடைசி வரை அதுபோன்று எதுவும் நடக்கவில்லை. தற்போதும் அதிமுகவில் தனித்து விடப்பட்டுள்ள ஓபிஎஸ் சசிகலாவை சந்திக்க முயன்று வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் முதன்முறையாக ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளார் சசிகலா. இதனால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் உற்சாகமடைந்துள்ள நிலையில் சசிகலா ஏன் திடீரென இதுபோன்று பேசியிருக்கிறார் என எடப்பாடி பழனிச்சாமி ஆதரவாளர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.