சசிகலாவின் சதுரங்க விளையாட்டு: எதிரிகளை வெல்ல ஆலய வழிபாடு..அதிமுகவை ஆட்டம் காண வைக்க ஆடியோ ரிலீஸ்
சசிகலா தனது சதுரங்க விளையாட்டினை ஆடியோ ரிலீஸ் மூலம் ஆரம்பித்து விட்டார். ஆனால் இந்த ஆடியோக்கள் எல்லாம் அதிமுக தலைமையை அசைத்துக்கூட பார்க்கவில்லை என்பதுதான் உண்மை.
சென்னை: அரசியலை விட்டு ஒதுங்குகிறேன் என்று கூறிய சசிகலா இப்போது 20க்கும் மேற்பட்ட ஆடியோக்களை ரிலீஸ் செய்து அதிமுக தலைமையை அசைத்து பார்க்கிறார். ஆனால் அந்த ஆடியோக்கள் சசிகலா பேசியதுதானா அல்லது யாரையாவது வைத்து டப்பிங் செய்து ரிலீஸ் செய்கிறார்களா என்ற சந்தேகம் அதிமுகவினரிடையே எழுந்துள்ளது.
ஜெயலலிதா உயிரோடு இருந்தவரை அவருடைய நிழலாக வலம் வந்தவர் சசிகலா. சசிகலாவின் விரலசைவில் பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. தேர்தலின் போது வேட்பாளர்களை தேர்வு செய்வது முதல் அமைச்சரவையில் துறை ஒதுக்குவது வரை அவரது தலையீடு இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எல்லாம் ஜெயலலிதா உயிரோடு இருந்தவரைக்கும்தான். நிழலாக இருந்த சசிகலா எப்போது முதல்வர் நாற்காலியில் அமர ஆசைப்பட்டாரோ எல்லாம் முடிந்து போனது. முதல்வர் நாற்காலிக்கு அவர் ஆசைப்பட்டால் போதுமா? சிறைக்குப் போகும் யோகம் இருந்ததால் நான்கு ஆண்டுகள் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார்.
வாய்ப்பே இல்லை.. சசிகலா ஏற்கெனவே நீக்கப்பட்டவர்.. அவர் சொல்வதெல்லாம் பொய்.. கே சி வீரமணி
நான் வருவேன்
கடந்த பிப்ரவரி மாதம் பெங்களூருவில் இருந்து சென்னை திரும்பிய சசிகலா தனக்கு பின்னால் மக்கள் அணி திரள்வார்கள் என்பதைக் காட்டுவதற்காக வழியெங்கும் கூட்டத்தை கூட்டத்தினார். அன்புக்கு நான் அடிபணிவேன் என்று எம்ஜிஆர் பாடல்களை எல்லாம் பாடி அரசியலுக்கு வருவேன் என்று சொன்னார்.
ஒதுங்கிய சசிகலா
ஆரவரமாக அரசியலுக்கு வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சசிகலா திடீரென்று அரசியலை விட்டு ஒதுங்குவதாக மார்ச் மாதத்தின் முதல்வாரத்தில் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கை அமமுகவினருக்கு ஏமாற்றத்தை அளித்தது. குறிப்பாக டிடிவி தினகரன்தான் அதிகம் ஏமாற்றமடைந்தார்.
சசிகலாவின் வேண்டுதல்
அதே மார்ச் மாதத்தில் குடும்ப விஷேசம் ஒன்றில் பங்கேற்க குல தெய்வ கோவிலுக்குப் போனார் சசிகலா. அங்கு கண்ணீர் மல்க கும்பிட்டார். அப்போது அங்கிருந்த சாமியார் ஒருவர், இனி உனக்கு தோல்வியில்லை நினைத்த காரியம் நடக்கும் என்று சொல்லி அனுப்பி வைத்தார்.
எதிரிகளை வெல்ல யாகம்
சசிகலாவின் தஞ்சாவூர் பயணத்தின் போது பிரம்மஹத்தி தோஷம் நீக்கும் திருவிடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபட்டார். பாபநாசம் கோவிலுக்கும் சென்று வழிபட்டார். தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி ஆதி கேசவ பெருமாள் கோவில், ராமேஸ்வரர் ராமநாதசுவாமி கோவிலுக்கும் சென்று ஸ்படிக லிங்க பூஜையும் யாகமும் செய்து வழிபட்டார். ஸ்ரீரங்கத்திற்கும் சென்று யாகம் செய்து வழிபட்டார். திருச்செந்தூர் முருகன் கோவிலில் எதிரிகளை வெல்ல யாகம் நடத்தியுள்ளாராம் சசிகலா.
அதிகாரம் மீண்டும் வருமா
அதிமுகவை கைப்பற்ற வேண்டும் என்பதே சசிகலாவின் ஆசை. அதற்காகவே கடந்த 3 மாதகாலமாக காய் நகர்த்தி வருகிறார். தேர்தல் தோல்வியைக் காரணமாக வைத்து மீண்டும் தனது சதுரங்க விளையாட்டை ஆரம்பித்து விட்டார். அதன் ஒரு பகுதியாகவே தற்போது ஆடியோவை ரிலீஸ் செய்து வருகிறார்.
எந்த பயனும் இல்லை
சசிகலா இதுவரை 20க்கும் மேற்பட்டோரிடம் பேசி ஆடியோக்களை தினசரி ஒன்றாக ரிலீஸ் செய்து வருகிறார். கடைசியாக பேசிய ஆடியோவில் அதிமுகவை என் உயிரில் இருந்து பிரிக்க முடியாது என்று ஒரு தொண்டரிடம் பேசியுள்ளார். தான் பேசும் ஆடியோக்கள் அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தும் என்பது சசிகலாவின் எண்ணம். அதே நேரத்தில் சசிகலாவின் ஆடியோ பேச்சுக்களை எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட யாரும் சட்டை செய்ததாக தெரியவில்லை.
நேரம் சரியில்லை
சசிகலாவின் ஜாதகப்படி தற்போது குரு விரைய ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். இப்போதைக்கு அதிரடி செயல்பாடுகளுக்கு ஏற்ற காலம் இல்லை என்று ஜோதிடர்கள் அறிவுறுத்தியுள்ளனர். அதனால்தான் நிழலாக இருந்து கொண்டு தனது காரியங்கள் உறவினர்கள் மூலம் செயல்படுத்தி வருகிறார்.
பின்னணியில் யார்
சசிகலா தனது அக்காள் மகன்கள் குடும்பத்தையும், சகோதரர்கள் குடும்பத்தையும் தற்காலிகமாக ஒதுக்கி வைத்து விட்டார். தற்போது அவருக்கு ஆதரவாக இருப்பது கணவர் எம். நடராஜரின் உறவினர்கள்தானாம்.
தனது கணவரின் உடன் பிறந்த சகோதரர்களை பின்னணியாக வைத்துதான் இந்த ஆடியோக்களை வெளியிடுகிறார் சசிகலா என்ற தகவலும் வெளியாகி வருகிறது.
ஆவணியில் இருந்து அதிரடி
சசிகலா போயஸ்கார்டனில் இருந்துதான் தனது அரசியலை ஆரம்பித்தார். தற்போது மீண்டும் அங்கு புது வீடு கட்டி குடியேறப்போகிறார். அப்போது குருபகவான் மீன ராசிக்கு லாப ஸ்தானத்தில் சனியோடு இணைந்து விடுவார். இதன் பிறகு தனது அதிரடியை ஆரம்பிக்கலாம் என்று நினைக்கிறார் சசிகலா. அதே நேரத்தில் சசிகலாவின் பின்னால் பெரிய அளவில் தொண்டர் படையோ, உறவினர் படையோ யாரும் இல்லை என்பதுதான் உண்மை.
சசிகலா நினைப்பது நடக்குமா
சசிகலாவால் இதுவரை ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு கூட போக முடியவில்லை. அவர் ஜெயலலிதாவின் போயஸ்கார்டன் வீட்டிற்கு போய் விடக்கூடாது என்றுதான் அதை அரசு நினைவு இல்லமாக மாற்றி விட்டார்கள். ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தை கைப்பற்ற வேண்டும் என்று நினைக்கிறார் சசிகலா. அதற்காக ஆள் பலத்தை ஆடியோ மூலம் திரட்டி வருகிறார் சசிகலா. அவருடைய எண்ணம் ஒருபோது நிறைவேறாது என்பதுதான் இபிஎஸ், ஜெயக்கும், கேசி வீரமணி, கே.பி முனுசாமி ஆகியோரின் கருத்தாக உள்ளது.
வீடியோ மூலம் பேசுவாரா
சசிகலா தான் அரசியலை விட்டு ஒதுங்குவதாக அறிக்கை மூலம்தான் வெளியிட்டார். தற்போது ஆடியோவாக பேசி வருகிறார். இப்போது உள்ள வசதிக்கு வீடியோ கால் வசதியும் உள்ளது. வீடியோவில் பேசி ரெக்கார்ட் செய்து அதை வெளியிட்டால் மட்டுமே அதன் உண்மை தன்மையை உணர முடியும். அதுவரைக்கும் சசிகலாவின் ஆடியோக்கள் எல்லாம் காமெடியாவும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே இருக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.