எடப்பாடி பழனிசாமியின் காரை மறித்த அமமுகவினர்! காலணி வீச்சால் மெரினாவில் பரபரப்பு!
சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு அங்கிருந்த புறப்பட்ட எடப்பாடி பழனிசாமியை அமமுகவினர் மறிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிசாமியின் காருக்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் விவகாரத்தில், அதிமுகவினருக்கும் அமமுகவினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனிடையே உடனடியாக போலீஸார் தலையிட்டு நிலைமையை சுமூகமாக்கியதால் பெரும் அடிதடி தவிர்க்கப்பட்டது.
ஜெயலலிதா நினைவுநாள்... ஓபிஎஸ்- இபிஎஸ்க்கு சவால்விட்டு மாஸ் காட்ட தினகரனுடன் ஸ்கெட்ச் போட்ட சசிகலா!
ஜெயலலிதா நினைவுதினம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி மெரினா கடற்கரையில் உள்ள அவரது நினைவிடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மரியாதை செலுத்தி உறுதிமொழியும் ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வு முடிந்து வீட்டுக்கு புறப்பட எடப்பாடி பழனிசாமி தனது இன்னோவா காரில் நினைவிடத்தில் இருந்து வெளியே வந்தார்.
தள்ளுமுள்ளு
அப்போது காமராஜர் சாலையில் சசிகலா மற்றும் தினகரனை வரவேற்பதற்காக நின்று கொண்டிருந்த அமமுகவினர், எடப்பாடி பழனிசாமியின் காரை பார்த்ததும் பாயத் தொடங்கினர். அவர் காரை மறிக்க முயன்றதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் அதிமுகவினர் அமமுகவினர் இடையே அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நிலைமை மோசமடைவதற்கு முன்பு மோதலில் ஈடுபட முயன்ற இரு தரப்பினரையும் விலக்கி வைத்தனர் போலீஸார்.
காவல்துறை
காவல்துறையினர் இதில் தலையிட சிறிது தாமதம் செய்திருந்தாலும் அங்கு பெரும் அடிதடியே அரங்கேறியிருக்கும். ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். அஞ்சலி செலுத்திவிட்டு புறப்பட்ட பிறகே சசிகலாவுக்கும், தினகரனுக்கும் அங்கு நேரம் ஒதுக்கித் தரப்பட்டிருந்தது. சசிகலா, தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியாக சென்று ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
வெளியூர் தொண்டர்கள்
சசிகலாவையும், தினகரனையும் வரவேற்க தென் மாவட்டங்களில் இருந்து அதிகளவு தொண்டர்களும், ஆதரவாளர்களும் குவிந்திருந்ததை காண முடிந்தது. ஜெயலலிதா நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த வந்த வெளியூர் அமமுக நிர்வாகிகள் அனைவரும், இன்னும் ஓரிரு நாட்கள் சென்னையில் தங்கி சசிகலாவையும் சந்தித்துவிட்டு ஊர் திரும்ப திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.