அறிக்கையில் இருப்பது இதுதான்.. அதிமுக வெற்றிக்கு "ஆசி" வழங்கிய சசிகலா.. அப்போ அமமுக?
சென்னை: "வரும் சட்டசபை தேர்தலில் அதிமுகவிற்கு ஓட்டு போடுங்கள்.." என்று மறைமுகமாக சசிகலா ஆசீர்வாதம் வழங்கி விட்டதாக கூறுகிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
அரசியலை விட்டு விலகுவதாக கூறி சசிகலா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் உள்ள சில வரிகள் அதிமுகவுக்கு பூஸ்ட் கொடுப்பதுபோல உள்ளன.
அதில் சில வரிகள் இதோ: அம்மாவின் உண்மை தொண்டர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து ஒற்றுமையுடன் வரும் தேர்தலில் பணியாற்றிட வேண்டும்.
சாதித்த எடப்பாடியார்.. சரியாத அதிமுக.. "தியாகமே தீர்வு.." சசிகலா திடீர் முடிவின் பரபர பின்னணி
திமுக ஆட்சிக்கு வரக்கூடாது
நம்முடைய பொது எதிரி தீய சக்தி என்று அம்மா நமக்குக் காட்டிய திமுகவை, ஆட்சியில் அமர விடாமல் தடுத்து, விவேகாக இருந்து, அம்மாவின் பொற்கால ஆட்சி தமிழகத்தில் அமைய அம்மாவின் தொண்டர்கள் பாடுபட வேண்டும்.
அம்மா ஆட்சி
அம்மா உயிருடன் இருந்தபோது எப்படி அவர் எண்ணத்தை செயல்படுத்தும் சகோதரியாக இருந்தேனோ, அவர் மறைந்த பிறகும் அப்படித்தான் இருக்கிறேன். இவ்வாறு கூறியுள்ள சசிகலா, கடைசியில் குறிப்பிட்ட சில வார்த்தைகள்தான் ஹைலைட். நான் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்து அம்மாவின் பொற்கால ஆட்சி அமைய, நான் என்றும் தெய்வமாக வணங்கும் என சகோதரியிடமும், எல்லாம் வல்ல இறைவனிடமும் பிரார்த்தனை செய்துகொண்டே இருப்பேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுக ஆட்சிக்கு ஆசி
இந்த வரிகளை வைத்து பார்க்கும்போது, தான் அரசியலுக்கு வருவதால் ஓட்டுக்கள் சிதறி அதிமுக தோல்வி அடைந்து, அது திமுகவுக்கு சாதகமாக போய்விடும் என்ற எண்ணம் அவர் மனதில் இருப்பது தெளிவாக தெரிகிறது. பொது எதிரி திமுகதான் என்பதால் அதை தோற்கடித்து, அதிமுக ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதுதான் சசிகலா எண்ணமாக இருக்கிறது என்பதே இந்த அறிக்கையின் சாராம்சம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
பின்னணி
அம்மாவின் ஆட்சி மலர வேண்டும் என்று அவர், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியை குறிப்பிட்டு கூறி இருக்கலாமே என்று சிலர் கேட்கிறார்கள். ஆனால் அப்படி நினைத்திருந்தால் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் கட்சியின் தலைவர் பதவி காலியாக இருக்கிறது என்று தினகரன் கூறியபோதும் அரசியலை விட்டு விலகுவதாக அறிவித்துள்ளாரே. தலைவர் பதவியில் இருந்து கொண்டு, நான் ஜெயலலிதா ஆட்சியை திரும்ப கொண்டு வருவேன் என்று பிரகடனப்படுத்தி இருக்கலாமே.. அப்படி செய்யவில்லை சசிகலா.
அதிமுக மகிழ்ச்சி
இதன்மூலம் அதிமுகவின் வெற்றிக்கு, இதனால் இடையூறு வரக்கூடாது. மீண்டும் அதே கட்சி ஆட்சியை பிடிக்கவேண்டும் என்பது சசிகலாவின் எண்ணம் என்று தெரிகிறது. இது மனப்பூர்வமான எண்ணமோ அல்லது வற்புறுத்தலால் ஏற்பட்ட எண்ணமா என்பதுபற்றியெல்லாம் கவலை இல்லை. ஒட்டுமொத்தமாக அதிமுகவுக்கு ஆசி வழங்கி விட்டார் சசிகலா. எனவே அதிமுகவின் ஓட்டு வங்கியில் எந்த இடையூறும் இல்லாமல் இருக்கும் என்று அடித்துச் சொல்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். தேர்தல் நேரத்தில் இது அதிமுகவுக்கு புது புத்துணர்ச்சியை கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை.