திரும்பி வந்துட்டேன்னு சொல்லு...நாள் குறித்த சசிகலா...ஜூன் 13-ல் திருவண்ணாமலையில் அதிரடி அறிவிப்பு?
சென்னை: தமிழக அரசியலில் ஒதுங்கி இருக்கும் சசிகலா ஜூன் 13-ல் தினகரன் மகள் திருமணத்தில் நிகழ்த்தும் உரையின் மூலம் மறு அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.
ஜெயலலிதா மீதான வருமானத்துக்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூருவில் 4 ஆண்டுகால சிறை தண்டனையை அனுபவித்தார் சசிகலா. இந்த சிறைவாசத்துக்குப் பின் தமிழகம் திரும்பினார் சசிகலா.
பல்லாவரத்தில் கர்ப்பிணியை தரதரவென இழுத்து சென்று செயின் பறிப்பு.. இரு கொள்ளையர்கள் கைது
அப்படி தமிழகம் திரும்பிய சசிகலாவுக்கு பெங்களூரு டூ சென்னை வழியில் 23 மணிநேரம் பிரமாண்டமான வரவேற்பு கொடுக்கப்பட்டது. அப்போது பேசிய சசிகலா தாம் தீவிர அரசியலில் ஈடுபடுவேன் என்றார். சென்னை திரும்பிய சசிகலா சற்று அமைதியாகவே இருந்தார்.
அதிமுக எதிர்ப்பு
அதேநேரத்தில் சசிகலாவை அதிமுகவின் எம்.எல்.ஏக்கள், அமைச்சர்கள் ஒருவர் கூட சந்திக்கவில்லை. இதனால் சசிகலா வருகைக்குப் பின்னர் அதிமுகவில் பிரளயம் ஏற்படும் என காத்திருந்த காத்திருப்புகள் தவிடுபொடியாகின. இன்னொரு புறம் சசிகலாவை அதிமுகவில் சேர்க்கவே மாட்டோம் என்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தரப்பு உறுதியாக இருந்தது.
அரசியலில் இருந்து ஒதுங்கி இருத்தல்
இதையடுத்து சசிகலா ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் தற்போதைய நிலையில் அரசியலில் ஒதுங்கி இருக்கப் போவதாகவும் திமுகவை வீழ்த்த வேண்டும் எனவும் கூறியிருந்தார். இதனையடுத்து சசிகலாவை சுற்றிய எதிர்பார்ப்புகள் அத்தனையும் கமுக்கமாக முடிவுக்கு வந்தன.
சசிகலாவின் இறை உலா
இதன்பின்னர் திடீர் திடீரென கோவில் கோவிலாக சுற்றி வருகிறார் சசிகலா. சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதாவின் வேதா இல்லத்துக்கு நேர் எதிரே பிரமாண்ட பங்களாவை கட்டி வருகிறார் சசிகலா. அந்த பணிகளையும் அவ்வப்போது நேரில் சென்று பார்வையிட்டு வருகிறார் சசிகலா. இத்தனைக்கும் நடுவேதான் சசிகலா குடும்பத்தில் திருமண நிகழ்ச்சி நடைபெறுகிறது.
தினகரன் மகள் திருமணம்
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் மகளுக்கு ஜூன் 13-ந் தேதி திருவண்ணாமலை கோவிலில் திருமணம் நடைபெற உள்ளது. திருவண்ணாமலையை சேர்ந்த மறைந்த மூக்குபொடி சித்தர்தான் தினகரனின் ஞான குரு. பிரச்சனையான நேரங்களில் மூக்குபொடி சித்தரை தரிசனம் செய்வது தினகரனின் வழக்கம். இப்போதும் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள மூக்குபொடி சித்தரின் சன்னதிக்கு தினகரன் செல்வது வழக்கம்.
ஜூன் 13-ல் சசிகலா அறிவிப்பு?
தினகரனின் மகள் திருமணம் நடைபெறும் ஜூன் 13-ந் தேதி அன்று அந்த நிகழ்ச்சியிலேயே சசிகலா நீண்ட உரையாற்றவும் தயாராக இருக்கிறாராம். எப்படியும் இந்த தேர்தலில் அதிமுக பின்னடைவை சந்திக்கவே வாய்ப்பிருக்கிறது. இந்த பின்னடைவை சரிசெய்ய சசிகலா தலைமையே தீர்வு என்கிற குரல்கள் மே 2-க்குப் பின்னர் அதிமுகவில் எழும். இதற்கு ஏற்ப ஜூன் 13-ந் தேதி சசிகலா நிகழ்த்தும் உரையில், ஜெயலலிதா கட்டி காப்பாற்றிய அதிமுகவை நூற்றாண்டுகளுக்கும் காப்பாற்ற தாம் மீண்டும் அரசியலுக்கு வருகிறேன் என்கிற அறிவிப்பை வெளியிடுவார் என்கின்றன அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள்.