எதிரிகள் பதறும்படி விஸ்வரூபம் எடுப்பார் சசிகலா... நமது எம்ஜிஆர் மூலம் சேதி சொல்லும் தினகரன்
எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி சின்னம்மா விஸ்வரூபம் எடுப்பார். துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை. இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை என்று நமது எம்ஜிஆர் கட்டுரை வெளியிட்டுள்ளது.
சென்னை: சசிகலா விரைவில் தீவிர அரசியலில் களமிறங்கப்போவதாக இன்றைய தினம் அமமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான நமது எம்ஜிஆரில் கட்டுரையில் வெளியாகியுள்ளது. எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி சின்னம்மா விஸ்வரூபம் எடுப்பார் என்று அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அவதூறுகளுக்கு இனி துளியும் இடமில்லை' என்ற தலைப்பில் இன்றைய தினம் நமது எம்ஜிஆர் நாளிதழில் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது. துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை என்றும் இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை என்றும் அந்த கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துரோகிகள் ஒன்றை புரிந்துகொள்ளவேண்டும்; நினைவுபடுத்திக் கொள்ளவேண்டும். கழகம் வலிமையோடும் பொலிவோடும் இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணம் கொண்டோர் சத்திய அரசியலில்தான் ஈடுபடுவார்கள். சந்தர்ப்பவாத அரசியலில் அல்ல. சூதும் சூழ்ச்சியும் கவ்விய அரசியலில் ஒருபோதும் ஈடுபடமாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சசிகலா உறுதி
சுயநலத்திற்காக இயக்கம் சிதறுண்டு போவதை சின்னம்மா ஒருகாலும் ஏற்கமாட்டார். தொண்டர்களை காத்திட எந்த தொல்லையும் எதிர்த்து, எதிர் நீச்சல் போட துணிவோடு முடிவோடு தீவிர அரசியலில் ஈடுபட, திடமான உறுதியான முடிவை எடுத்துவிட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் களம் புகுவோம்
சின்னம்மாவின் அரசியல் பிரவேசம் இன்னும் சில நாட்களில் அசுர வேகம் எடுக்கும். கழகம் புத்தெழுச்சி பெறும் நடவடிக்கைகள் தொடங்கிவிட்டது. தேர்தல் களம் புகுவோம்; எழுச்சியோடு களப்பணி ஆற்றுவோம். புறப்படுங்கள் புறநானூற்று படைகளை தேர்தல் களம் நோக்கி... ஒன்று பட்டால் உண்டு வாழ்வு.
மன்னிப்பு இல்லை
எதிரிகளின் நெஞ்சம் பதறும் படி சின்னம்மா விஸ்வரூபம் எடுப்பார். துரோகிகளுக்கு மீண்டும் ஓர் எச்சரிக்கை. இனியும் துரோகிகளுக்கு மன்னிப்பு என்பது இல்லை இவ்வாறு அந்த கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சசிகலா வருகை
சொத்து குவிப்பு வழக்கில் இருந்து விடுதலையாகி கடந்த பிப்ரவரி 9ஆம் தேதி சென்னை வந்தார் சசிகலா. பெங்களூருவில் இருந்து சென்னைக்கு 23 மணிநேரம் பயணித்த சசிகலாவிற்கு சென்னைக்கு வரும் வழியில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. வரும் வழியில் செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, இனி வரும் காலங்களில் நான் தீவிர அரசியலில் ஈடுபட உள்ளேன் என்று கூறினார்.
அதிரடி பேட்டி
தொண்டர்களின் அன்புக்கும்,மக்களின் அன்புக்கும் நான் எப்போதுமே அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு என்றுமே நான் அடிபணிய மாட்டேன் என்று அதிரடியாக பேசிய சசிகலா கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஓய்வெடுத்து வருகிறார். அரசியலில் தனது அடுத்த கட்ட அரசியல் நகர்வு பற்றி டிடிவி தினகரனுடன் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.