சசிகலாவுக்கு தேர்தலில் போட்டியிட்டால் தோல்வியடைவார் - ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து
சசிகலாவிற்கு சட்டரீதியாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது என்று ஒன் இந்தியா தமிழ் வாசகர்கள் கருத்து கூறியுள்ளனர்.
சென்னை: சசிகலா தலைமையில் ஜெயலலிதாவின் ஆட்சியமைப்போம் என்று நம்பிக்கையோடு கூறி வருகிறார் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைவர் டிடிவி தினகரன். ஒருவேளை சசிகலாவிற்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தாலும் அவரால் வெற்றி பெற முடியாது தோல்வியடைவார் என்று நமது ஒன் இந்தியா தமிழ் இணைய தளம் நடத்திய கருத்துக்கணிப்பில் வாசகர்கள் வாக்களித்துள்ளனர்.
தமிழக சட்டசபைத் தேர்தல் களம் படுபரப்பாக உள்ளது. குளிர் காலத்திலும் ஆளுங்கட்சி, எதிர்கட்சியினரின் அனல் பறக்கும் பிரச்சாரத்தினால் தேர்தல் களம் களைகட்டியுள்ளது. இந்த சட்டசபைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி ஒரு பக்கம், திமுக தலைமையிலான கூட்டணி மற்றொரு பக்கம் என தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம் கட்சிகளும் தனி ஆவர்த்தனம் செய்வதால் தமிழக அரியணைக்கு இம்முறை நான்கு முனைப் போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் அரியணையைக் கைப்பற்ற யாருக்கு பெரும்பான்மை கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் எழுந்துள்ளது. சசிகலாவின் வருகை தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தப்போவதாக கூறி வருகிறார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரன்
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் தனித்து களம் காணப்போகிறதா? அல்லது புதிய கூட்டணியை உருவாக்கப் போகிறதா என்பது யாராலும் கணிக்க முடியாத மர்மமாக உள்ளது. சசிகலா சட்டசபைத் தேர்தலில் போட்டியிடுவார் என்று மட்டும் டிடிவி தினகரன் கூறி வருகிறார்.
ஒன் இந்தியா தமிழ் கருத்துக்கணிப்பு
சசிகலாவுக்கு தேர்தலில் போட்டியிட சட்டரீதியாக வாய்ப்பு கிடைத்தால் அவரால் வெல்ல முடியுமா? என்ற கேள்வி ஒன் இந்தியா வாசகர்களிடம் முன் வைக்கப்பட்டது. இந்த கருத்துக்கணிப்பில் மொத்தம் 11,563 பேர் பங்கேற்றனர்.
சசிகலாவிற்கு தோல்வி
சசிகலா நிச்சயம் வெல்வார் என்று 32.65% பேர் கருத்துக்கூறியுள்ளனர். 3,775 வாக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் சசிகலா
தோல்வி அடைவார் என்று 54.67% பேர் கருத்து கூறியுள்ளனர். 6,321 பேர் இந்த கருத்தை பதிவிட்டு வாக்களித்துள்ளனர்.
பொறுத்திருந்து பார்ப்போம் என்று 1467 பேர் அதாவது 12.69% பேர் கருத்து கூறியுள்ளனர்.
சிறையில் இருந்து விடுதலை
சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டுகள் சிறைத்தண்டனை முடிந்து விடுதலையான சசிகலா, அரசியலில் ஈடுபடப்போவதாக கூறியுள்ளார். புயலுக்கு முன்பு ஏற்படும் அமைதியைப் போல சசிகலாவின் தற்போதைய நிலை உள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் படி சிறை தண்டனை பெற்றவர்கள், தண்டனை அறிவிக்கப்பட்ட உடனேயே பதவியில் தொடர்வதற்கான தகுதியை இழப்பதுடன், தண்டனை முடிந்த பிறகும் அடுத்த ஆறாண்டுகள் வரை தேர்தலில் போட்டியிட முடியாது.
சசிகலா போட்டியிடுவாரா?
அதே நேரத்தில் ஊழல் வழக்கில் சிறைத்தண்டனை அனுபவித்த பிரேம் சிங் தமாங் சிக்கிம் மாநில முதல்வர் ஆகிவிட்டார். முறைகேடு வழக்கில் தண்டிக்கப்பட்டு சிறைத்தண்டனை பெற்ற தமாங், தேர்தலில் போட்டியிட தேர்தல் ஆணையம் அனுமதி அளித்தது. தமாங் விஷயத்தை மனதில்வைத்துத்தான், தேர்தலில் போட்டியிடுவதற்கான சட்ட வாய்ப்பு கிடைத்தால், வருகிற சட்டமன்றத் தேர்தலில் கண்டிப்பாக சசிகலா போட்டியிடுவார் என்று டி.டி.வி.தினகரன் கூறி வருகிறார். சசிகலா போட்டியிடுவாரா? தேர்தல் பிரச்சாரம் செய்ய வருவாரா? பார்க்கலாம்.