அதிமுகவை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி போகும் சசிகலா குடும்ப ஆதிக்கம்!
அதிமுகவில் இருந்து சசிகலா குடும்பத்தினால் விலகி செல்லும் சூழல் ஏற்பட்டுள்ளது
Recommended Video
சென்னை: மொத்தமாகவே மன்னார்குடி குடும்பமானது அதிமுகவிலிருந்து ரொம்ப தூரத்துக்கு விலகி போய் கொண்டு இருக்கிறது.
ஜெயலலிதாவின் உடலை அஞ்சலிக்கு வைத்த அந்த தருணத்திலிருந்து, அதுவரை மறைமுகமாக இருந்து வந்த சசிகலாவின் ஆளுமை அதிமுகவில் வெளிப்படையாக ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்தது. அடுத்தடுத்த தினங்களில் ஒட்டுமொத்த கட்சியையும் கைப்பிடிக்குள் வைத்து ஆட்டி படைத்தது.
சொத்து சேர்த்த வழக்கு உள்ளிட்டவைகளால் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட நேர்ந்தது அவரே எதிர்பாராத ஒன்றுதான். இறுதிவரை எப்படியாவது ஜெயிலுக்கு போய்விட மாட்டோம் என்றுதான் சசிகலா நம்பி இருந்தார்.
சாப்பிடுங்கய்யா.. வயிறார சாப்பிடுங்க.. ஏதோ எங்களால முடிஞ்சது.. அகரம்தூளி கிராமத்தில் ஒரு மாற்றம்!
சசிகலா
தவறு செய்ததால், சிறை செல்ல நேரிடினும், ஒருவேளை, சசிகலா சிறை செல்லாமல் இருந்திருந்தால், அதிமுக இந்நேரம் வேற லெவலில் உயர்ந்திருக்கும். எந்த நிர்வாகியும் இப்படி பகிரங்கமாக குறைகளை சொல்லி ஆட்சியை விமர்சித்திருப்பார்களா என்பது சந்தேகம்தான். எப்படி இருந்தாலும் ஒரு ராணுவ கட்டுப்பாட்டில் அதிமுக இருந்திருக்கவே செய்யும்.. சில சமயங்களில் சிலரது நடவடிக்கை, பேச்சை பார்த்தால், இது சரிதான் என்றுகூட சொல்ல தோன்றுகிறது.
கூடாரம் காலி
தினகரனிடம் கட்சியை நம்பி ஒப்படைத்துவிட்டு போனால், இன்று மொத்தமாக காலி செய்து வெறும் கூடாரத்தை வைத்திருக்கிறார். ஆரம்பத்தில் இருந்தே எடப்பாடியுடன் இழுபறி, சண்டை என்று வளர்ந்து அமமுக என்ற கட்சி உதயமாகும் வரை போய்விட்டது. எத்தனையோ பேர் தினகரனை நம்பி சென்றார்கள். தினகரனும் ஏற்றம் கண்ட வேகத்திலேயே வீழந்தும் விட்டார்.
செந்தில்பாலாஜி
நிர்வாக கோளாறா அல்லது சசிகலா பேச்சின்படி தினகரன் நடந்து கொள்ளவில்லையா, அல்லது நம்பி இருக்கும் முக்கிய நிர்வாகிகளின் பேச்சை தினகரன் மதிக்கவில்லையா என தெரியவில்லை. பிள்ளையார் சுழியை செந்தில்பாலாஜி போட, இன்று ஒவ்வொருவராக விலகி கொண்டுள்ளனர்.
ஊடகங்கள்
ஆனால் இவ்வளவு பேர் விலகியும் தினகரன் சொல்வது, "தினகரன் கட்சி சரிவு என்று வேண்டுமென்றால் ஊடகங்களில் போட்டுக் கொள்ளுங்கள். யார் சென்றாலும் எங்களுக்கு பாதிப்பில்லை, நிர்வாகிகள் விலகி செல்லச்செல்ல கட்சி பலப்படும்" என்கிறார்.
கோபம்
எந்த தைரியத்தில், யார் தைரியத்தில் தினகரன் இப்படி பேசுகிறார் என்று இதுவரை தெரியவில்லை. ஏற்கனவே தேர்தல் ரிசல்ட்டில் சசிகலா கடுமையான கோபத்தில் உள்ளார். இப்போது முக்கிய நிர்வாகிகள் சென்று கொண்டிருக்கும் நிலையில், அவரை சிறையில் சென்று தினகரன் பார்க்கவில்லை என்றும் தெரிகிறது. இதற்கு நடுவில் அமமுகவை, கட்சியாக அங்கீகரித்து, அதன் பொதுச்செயலாளராகவும் தன்னை அறிவித்து கொண்டார்.
இரட்டை இலை
ஒருவேளை, சசிகலாவே இந்நேரம் பொதுச்செயலாளராக இருந்திருந்தால்கூட, நாளை ரிலீஸாகி வந்தால்கூட ஏதாவது செய்ய முடியும். இப்போது அவர் ரிலீஸ் ஆகி வந்தாலும், கட்சியை கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேடும் நிலைமை உள்ளது. இதை தவிர அவரது உடல்நிலைமையையும் கருத்தில்கொள்ள உள்ளது. இரட்டை இலை சின்னம் உரிமை கோரும் வழக்கினை தொடர்ந்தால்கூட, மதுசூதனன் உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் சசிகலாவுக்கு ஆதரவாக செயல்படுவார்களா என்பது சந்தேகம்தான்.
சபதம் என்னாகும்?
"அதிமுகவை என்னிடமிருந்து எந்த சக்தியாலும் பிரிக்க முடியாது. நான் எங்கு இருந்தாலும் அதிமுக மீதான சிந்தனை எப்பவுமே இருக்கும். என்னை எந்த கூட்டில் அடைத்தாலும் கட்சி வளர்ச்சியை நோக்கிதான் என் எண்ணம் இருக்கும். என்னை ஜெயிலில் அடைக்கலாமே தவிர, என் மனதை அடைத்து வைக்க முடியாது, என் இதயத்தில் இருந்து அதிமுகவை பிரிக்க முடியாது" என்று ஜெ. சமாதியில் சபதம் போட்டு விட்டு போனார். அந்த சபதம் கடைசிவரை சசிகலாவுக்கு நிறைவேறாமலேயே போய்விடும் போல உள்ளது.. அதிமுகவுக்கும் சசிகலா குடும்பத்துக்கும் சம்பந்தமே இல்லாமல் போய்விடும் போலவும் உள்ளது.