"பாஜகவும் சசிகலாவும்".. என்ன நடக்கிறது அமமுகவில்.. அழுத்தத்தில் அதிமுக.. பலே ஐடியாவில் கட்சிகள்!
பாஜக குறித்து சசிகலாவின் நிலைப்பாடு உறுதியாக தெரியவில்லை
சென்னை: அமமுக மீது பாஜகவின் பார்வை லேசாக விழுந்து கொண்டிருக்கிறது என்பது தெரிந்த விஷயம்தான்.. ஆனால், பாஜக குறித்து சசிகலா என்ன நினைக்கிறார் என்பதுதான் தெரியவில்லை.. அமமுக - அதிமுக என்று பார்ப்பதா? அல்லது பாஜக - அமமுக என்ற கண்ணோட்டத்தில் பார்ப்பதா? இப்படியும் ஒரு சந்தேகம் அரசியல் களத்தில் எழ தொடங்கி உள்ளது.
Recommended Video
சசிகலா சென்னை வந்ததில் இருந்தே அமைதியாக இருந்தவர், திடீரென ஜெயலலிதா பிறந்த நாள் அன்று தன் மவுனத்தை கலைத்தார்.. ஓரிரு அரசியல் கட்சி தலைவர்களையும் சந்தித்தார்.. இந்த சந்திப்பின் சலசலப்பும், பரபரப்பும் இன்னும் அடங்கவில்லை.
அதேசமயம், பாஜக அதிமுகவுடன் கூட்டணி முடிவாகாமல் இழுத்தடிக்கப்பட்டு வருகிறது.. இந்த இழுபறிக்கு பின்னணியில் சசிகலாவின் பேச்சும், அமமுகவின் இணைப்பும் கலந்து இருப்பதாகவும் ஒரு தகவல் கசிந்து வருகிறது.
அதிமுக கூட்டணியில் அமமுக சாத்தியமா?.. எடப்பாடியாரே ஒத்துக்கிட்டாலும் தினகரன் ஏத்துக்க மாட்டாரே!
தினகரன்
சசிகலா சென்னை வந்த சமயம், அதிமுகவுடன் அமமுகவை இணைக்க பாஜக ஒரு முயற்சி மேற்கொண்டது உண்மைதான்.. ஆனால், அது அப்போதே நிறுத்தப்பட்டுவிட்டது.. அதற்கு பிறகு பெரிதாக ஆர்வமும் காட்டவில்லை.. சசிகலா பற்றின பேச்சையும் பாஜக எடுக்கவில்லை.. இப்போது திடீரென அமமுக குறித்து பாஜக பேச காரணம் என்ன? ஒருவேளை, திமுகவுக்கு செக் வைக்க, அல்லது திமுகவுக்கு மெஜாரிட்டி கிடைக்ககூடாது என்ற அரசியல் நோக்கத்திற்காக பாஜக அப்படி நினைக்கலாம்.
பாஜக
இதில், சசிகலா நிலைப்பாடு என்ன? தினகரன் ரோல் வேறு மாதிரியாக இருக்க காரணம் என்ன? என்பதையும் கவனிக்க வேண்டி உள்ளது. பாஜகவை பொறுத்தவரை மொத்தம் 58 சீட்களை கேட்டு வருகிறதாம்.. இதில் 30 பாஜகவுக்கு, 20 அமமுகவுக்கு, இதர கட்சிகளுக்கு மற்றவை என்று சொல்லப்படுகிறது.. இந்த 58 சீட்டில்தான் உறுதியாகவும் இப்போதுவரை பேசி வருகிறதாம். இதற்கு அதிமுக ஒப்புக் கொள்ளவில்லை. நகை கடன் தள்ளுபடி, விவசாய கடன் தள்ளுபடி, மாணவர்களுக்கான அறிவிப்பு போன்றவைகளை வைத்தே ஓட்டு கேட்டால் வெற்றி கிடைத்துவிடும் என்று எடப்பாடியார் நம்புகிறாராம்.
இணைப்பு
ஆனால், சசிகலாவோ வேறு மாதிரியாக கணக்கு போட்டு கொண்டிருக்கிறார்.. என்னதான் "ஒன்றிணைவோம்" என்று அறிக்கை விட்டாலும், பேட்டி தந்தாலும், உண்மையிலேயே அவருக்கு அணிகள் இணைவதில் இப்போதைக்கு ஆர்வம் காட்டவில்லையாம்.. ஏனென்றால், எப்படியும் அணிகள் இணைப்பு என்பது இப்போதைக்கு சாத்தியம் இல்லை என்று தெரிந்துவிட்டது. அதனால், தனித்து நின்று தேர்தலை சந்திப்பது, அதன்மூலம் ஓரளவு வாக்கு வங்கியை பெறுவது என்பதுதான் திட்டமாக இருப்பதாக தெரிகிறது.
பலே ஐடியா
இப்படி கணிசமான ஓட்டுக்களை பெற்றுவிட்டால், பாஜகவின் குட்புக்கில் இடம் பெற்றுவிடலாம், அதற்கு பிறகு பாஜக தலைவர்கள் நினைத்தால், அமமுகவை அவர்களே இணைக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்குவார்கள் என்பதே அந்த பலே ஐடியாவாக இருக்கிறது..
தொந்தரவு
மேலும், தன்னை பாஜக எந்தவிதத்திலும் தொந்தரவு செய்யவில்லை என்றும், கூடவே இருந்து நம்பிக்கை துரோகம் செய்தவர்களைவிட, ஜெயிலுக்கு அனுப்பினாலும் காழ்ப்புணர்ச்சியை அவ்வளவாக காட்டாத பாஜகவே மேல் என்றுதான் சசிகலா நினைக்கிறாராம். அதனால்தான், பாஜகவை கடிந்து கொள்வதுபோலவோ, விமர்சிப்பது போலவோ பேட்டிகள் எதையுமே தராமல் இருப்பதற்கு காரணமும் இதுதான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
டிடிவி தினகரன்
இதில் டிடிவி தினகரன் ரோல் என்ன என்று பார்த்தால், அவர் தன்னை ஒரு மாபெரும் தலைவராகவே நிலைநிறுத்தி கொள்ள முயற்சித்து கொண்டிருக்கிறார்.. கடந்த தேர்தலில் 6 சதவீதம் வாக்கு வங்கியை பெற்றபோதே, 3வது கட்சிக்கான அங்கீகாரம், தலைவருக்குரிய அத்தனை அந்தஸ்தும் தனக்கு கிடைத்துவிட்டதால், அதையே இந்த முறையும் மூலதனமாக முன்வைக்க முயற்சிக்கிறார்.. சசிகலா ஜெயிலில் இருந்தபோதே 6 சதவீதம் ஓட்டு வங்கியை பெற்ற நிலையில், இப்போது வெளியில் வந்து, தனக்கு ஆதரவாகவே இருப்பதால், இந்த வாக்கு வங்கி மேலும் உயரும் என்பதே அவரது கணக்காக உள்ளது.
குக்கர்
அதுமட்டுமல்லாமல், குக்கரும் தானாகவே வந்து கையில் விழுந்துவிட்டதால், அது கூடுதல் தெம்பை தந்துள்ளது.. வெளியில் வேண்டுமானால், "இணைப்பு" குறித்து பேசி கொண்டிருப்பார்களே தவிர, உண்மையிலேயே தனிப்பெரும்பான்மையை காட்டி, அதன்மூலம் பாஜகவை கவர்ந்து, அதன்மூலம் கட்சியை கைப்பற்றுவதுதான், சசிகலா, தினகரனின் இப்போதைய பலே வியூகமாக இருக்கிறது என்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்..! .