சாத்தான்குளம் வழக்கு.. போலீசார் மீது கொலை வழக்கு பதிவு செய்ய வேண்டும்.. ஸ்டாலின்
சென்னை: ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கில் சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் மற்றும் போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் முக ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் விற்பனை கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் ஊரடங்கு சமயத்தில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து கடையைத் திறந்து வைத்ததால் போலீசாரால் 19ம் தேதி கைது செய்யப்பட்டனர்.
இவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போலீசார் கோவில்பட்டி சிறையில் அடைத்தனர். அடைத்த அன்றே ஜெயராஜ் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் அடுத்தடுத்து மர்ம மரணம் அடைந்தனர். காவல்துறையினர் அடித்ததில் அவர்கள் உயிரிழந்ததாக அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் பல்வேறு தரப்பினரும் காவல்துறையினர் அடித்ததலேயே உயிரிழந்ததாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
சாத்தான்குளம் மரணம்.. ஜெயராஜ் குடும்பத்துக்கு ரஜினி போன் செய்து இரங்கல் தெரிவித்தாரா?
இதனிடையே இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றுவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் முக ஸ்டாலின், "பொதுமக்கள், அரசியல் கட்சிகள் மற்றும் ஊடகத்தினரின் கடும் அழுத்தத்தால் ஜெயராஜ் பென்னிக்ஸ் வழக்கை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
சிபிஐ விசாரணைக்கு மாற்றியுள்ளார்.
நீதி வழங்கும் அரசியல் துணிவும், முதுகெலும்பும் அரசுக்கு இருந்திருப்பின் உயிர்பறித்த காவல்துறையினர் இப்போதும் சுதந்திரமாக உலவ முடியுமா?
இரு அப்பாவிகளின் உயிர் பறிக்கப்பட்டிருப்பதற்கும் அவர்களது குடும்பத்திற்கும் நீதி வழங்க வேண்டும் எனில், அவர்களின் கோரிக்கையை ஏற்று IPC 302-ன்கீழ் கொலை வழக்குப் பதிவு செய்து- சம்பந்தப்பட்ட காவல்துறை உதவி ஆய்வாளர்கள் & போலீசாரை உடனே கைது செய்ய வேண்டும்" என்று கூறியுள்ளார்.