"ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. ரத்தத்தை பார்த்தேன்" குமுறிய "ரேவதீ".. பாதுகாப்பை உறுதிசெய்ய வேண்டும்
சாட்சி கூறிய பெண் போலீசுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும்
சென்னை: "ஆமா.. அடிச்சாங்க.. ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. ரத்தத்தை நான் பார்த்தேன்" என்று சாத்தான்குளம் மரணம் தொடர்பாக சாட்சி அளித்த தலைமை காவலர் ரேவதியின் பாதுகாப்பை முதல்வர் உறுதிசெய்ய வேண்டியது அவசியம்.
Recommended Video
கோவில்பட்டி நீதித்துறை நடுவரிடம் தலைமை காவலர் ரேவதி அளித்த வாக்குமூலம்தான் இந்த வழக்கில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியது.
"ஆமா.. அப்பா, மகன் 2 பேரையும் அங்கிருந்த போலீஸ்காரங்க ராத்திரியெல்லாம் அடிச்சாங்க.. விடிய விடிய அடிச்சாங்க.. லத்தியால் அடிச்சாங்க.. அந்த லத்தியிலும், டேபிளிலும் ரத்தக்கறை இருந்தது.. அதனை அழிக்க நேரிடும், உடனே கைப்பற்றணும்" என்றார்.
சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு.. காவலர் ரேவதிக்கு பாதுகாப்பும், ஊதியமும் வழங்க மதுரை கிளை உத்தரவு
அதிகாரிகள்
இத்தனை அதிகாரிகள் இந்த விசாரணையில் அமைதி காத்த நிலையில், ஒரு பெண் போலீஸின் துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. சக காவலர்கள் என்றுகூட பார்க்காமல், தனக்கு பின்விளைவுகள் ஏதாவது வருமா என்றுகூட பயப்படாமல், எதிராக சாட்சி அளித்த ரேவதிக்கு சோஷியல் மீடியாவில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.
ரேவதி
"மனசாட்சியோடு சாட்சி சொன்ன ரேவதிக்கு" வாழ்த்து என்கிறார்கள்.. "உங்களோடு தேசம் துணை நிற்கிறது. உங்கள் துணிச்சலும் தைரியமும் நீதி மீதான எங்கள் நம்பிக்கையை அதிகரிக்கிறது.. நாங்கள் உங்களுடன் இருக்கிறோம் மேம்... இருட்டில் ஒரு ஒளி நட்சத்திரம், ரேவதீ" என்று இருகரம் கூப்பி நன்றி சொல்லி பாராட்டி வருகின்றனர்.
பாதுகாப்பு
இது நமக்கு மகிழ்ச்சியை தந்தாலும், ரேவதியின் உயிர் பாதுகாப்பையும் உறுதிபடுத்த வேண்டி உள்ளது.. சாத்தான்குளம் வழக்கு என்று மட்டுமில்லை.. எந்த குற்ற வழக்காக இருந்தாலும், அதன் விசாரணை முறைகளில் எல்லா போலீசையும் குறை சொல்லிவிட முடியாது.. அப்படி சொல்லிவிடாமல், இதுபோன்ற ரேவதிகள் தங்கள் செயல்களால் உயர்ந்து நிற்கிறார்கள்.
கடம்பூர் ராஜு
ஆனால், இவ்வளவு நடந்தும், அது லாக்கப் மரணமே இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு சொன்னதுதான் அதிர வைக்கிறது. ஒரு அமைச்சரே இப்படி சொன்னால், அந்த ஸ்டேஷனில் என்னதான் நடந்தது என்று மக்கள் நினைக்க மாட்டார்களா? எந்தெந்த விஷயத்தில் முட்டுக்கொடுக்க வேண்டும் என்று வரைமுறை இல்லையா? இதனால் முதல்வரின் நற்பெயருக்குதான் களங்கம் ஏற்படும்.
பாதுகாப்பு
அந்த வகையில் மனதில் பட்டதை தைரியமாக சொல்லி உள்ளார் ரேவதி.. இந்த சாட்சியமானது, வழக்கின் தீர்ப்பு வரை தொடர்ந்து வரக்கூடியது.. அதனால் இவருக்கு பணி பாதுகாப்புடன் உயிருக்கு பாதுகாப்பும் அளிக்க வேண்டும்.. சிபிசிஐடி வசம் இந்த வழக்கு உள்ளவரை, முதல்வர்தான் இவரது தனிமனித பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.
முதல்வர்
முகம் தெரியாத மக்கள் ட்விட்டரில் உதவி கேட்டபோதெல்லாம் ஓடோடி வந்து உதவியர் நம் முதல்வர்.. ஒரு இளைஞரின் தந்தை இறந்ததுக்குகூட கவலைப்படாதே தம்பி என்று ஆறுதல் சொல்லி ட்வீட் போட்டவர்.. இந்த அளவுக்கு இளகிய மனம் கொண்ட முதல்வர், தன் கட்டுபாட்டில் இயங்கும் காவல்துறை பெண் ஊழியருக்கு நிச்சயம் பாதுகாப்புக்கு உத்தரவாதம் தருவார், ரேவதியை மனசார பாராட்டுவார் என்றே நம்புவோம்!