சாத்தான்குளம் வழக்கு: கொரோனாவால் மரணமடைந்த எஸ்.ஐ. பால்துரை உடல் மதுரையில் அரசு மரியாதையுடன் தகனம்
சென்னை: சாத்தான்குளம் லாக்கப் படுகொலைகள் வழக்கில் கைதான எஸ்.ஐ. பால்துரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். அவரது உடல் இன்று அரசு மரியாதையுடன் மதுரை தத்தனேரி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
சாத்தான்குளத்தில் வர்த்தகர் ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் விசாரணையில் அடித்து கொல்லப்பட்டனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த வழக்கை தாமாக முன்வந்து விசாரித்தது சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை. இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் இவ்வழக்கை முதலில் விசாரித்தனர். பின்னர் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவ்வழக்கில் எஸ்.ஐ. பால்துரை உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களில் எஸ்.ஐ. பால்துரை உடல்நலக் குறைவால் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
Recommended Video
கொரோனா தடுப்பூசி சக்சஸ் ஆகாவிட்டால் அடுத்து என்ன? 'ஹூ' தலைமை விஞ்ஞானி சவுமியா சொல்வதை பாருங்க!
இதனிடையே பால்துரைக்கு கொரோனா பாதிப்பு இருப்பதும் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி எஸ்.ஐ. பால்துரை உயிரிழந்தார். அவரது உடல் இன்று மதுரை தத்தனேரி மயானத்தில் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.
முன்னதாக மதுரை சட்டம் ஒழுங்கு துணை கமிஷனர் சிவபிரசாத், பால்துரையின் உடலுக்கு மலர் வளையம் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தினார்.