பொள்ளாச்சி சம்பவம் கொடூரத்தின் உச்சம்.. "மிருகங்களுக்கு" உச்சபட்ச தண்டனை வழங்குக- சத்யராஜ் ஆவேசம்
சென்னை: பொள்ளாச்சி விவகாரத்தில் தொடர்புடைய மிருகங்களுக்கு உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும் என நடிகர் சத்யராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களை கடந்த 7 ஆண்டுகளாக 20 பேர் கொண்ட கும்பல் ஒன்று சீரழித்து வந்ததாக கடந்த 24-ஆம் தேதி புகார் எழுந்தது. இதுதொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தமிழகத்தையே உலுக்கிய இந்த சம்பவம் குறித்து சத்யராஜ் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறுகையில், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் வன்கொடுமை அக்கிரமத்தின் உச்சம், அநியாயத்தின் உச்சம், கொடூரத்தின் உச்சம். இந்த மனித மிருகங்களை பற்றி என்ன சொல்வது என்றே எனக்கு தெரியவில்லை.
எப்படி மனம் வந்தது
சட்டபடி உச்சபட்ச தண்டனையை வழங்க வேண்டும். இந்த தண்டனையை தாமதம் இல்லாமல் வழங்க வேண்டும் என்பதுதான் எனது கோரிக்கை. எப்படி இப்படி ஒரு மனம் வந்தது என தெரியவில்லை.
மிருகங்கள்
என்னுடைய சிறிய வேண்டுகோள் என்னவென்றால், மனநலம் சம்பந்தப்பட்ட பாடத்தை பள்ளியிலிருந்தே தொடங்க வேண்டும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோள். அதனால் மட்டும் இந்த மிருகங்கள் மாறிவிடுவார்கள் என நான் நினைக்கவில்லை.
பாடமா எடுக்க முடியும்
இந்த மிருகங்களை தண்டிக்கத்தான் முடியும். திருத்த முடியாது. இவ்வளவு கொடூரமான மனசிருப்பவர்களுக்கு நாம் என்ன வகுப்பெடுத்துக் கொண்டா இருக்க முடியும்?
மனவலி
ஆனாலும் கூட பள்ளியிலேயே அடிப்படை கல்வியாக மனநலம் மருத்துவத்தை கற்பிக்க வேண்டும். இதுபோல் மனபிறழ்வுகளுக்கு காரணம் அவர்களுக்கு மனரீதியான சிகிச்சையும் தேவைப்படுகிறது. அதை நோக்கியும் கவனம் செலுத்த வேண்டும். சட்டபடியாக உடனடியாக அவர்களுக்கு தண்டனை வழங்க வேண்டும் என மனவலியோடு கூறிக் கொள்கிறேன் என்று சத்யராஜ் வீடியோவில் தெரிவித்துள்ளார்.