ரஃபேல் பேர ஊழல் புத்தகங்களை திருப்பி அளிக்க உத்தரவு.. இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் சாஹூ விளக்கம்
Recommended Video
டெல்லி: ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம் கேட்டுள்ளது.
ரஃபேல் விமானங்களை கொள்முதல் செய்த விவகாரத்தில் ஏராளமான முறைகேடு நடந்துள்ளதாக பாஜக மீது காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது. இந்த நிலையில் இந்த வழக்கு தொடர்பாக புதிதாக தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்கள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு உள்ளன.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ரஃபேல் குறித்து ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி பரபரப்பை ஏற்படுத்தினார்.
நாட்டை உலுக்கும் ரபேல் பேர ஊழல்.. புத்தக வெளியீட்டிற்கு தடை விதித்த தேர்தல் ஆணையம்.. அதிர்ச்சி!
புத்தகம் வெளியீடு
இந்த நிலையில் நாட்டை உலுக்கும் ரஃபேல் பேர ஊழல் என எழுத்தாளர் எஸ் விஜயன் எழுதிய புத்தகம் இன்று வெளி வருவதாக இருந்தது. இதற்கான புத்தக வெளியீட்டு விழா பாரதி புத்தகாலயம் சார்பாக சென்னை கேரளா சமாஜத்தில் இன்று நடக்க இருந்தது. தி இந்து மூத்த பத்திரிக்கையாளர் என்.ராம் இந்த புத்தகத்தை வெளியிடுவதாக இருந்தது.
புத்தகங்கள் பறிமுதல்
இந்த நிலையில் அந்த புத்தகத்தை வெளியிட தேர்தல் ஆணையம் தடை விதித்ததாகவும் விழாவையும் தடுத்து நிறுத்த உத்தரவிட்டதாகவும் தேர்தல் பறக்கும் படையினர் தெரிவித்தனர். இதையடுத்து சென்னை தேனாம்பேட்டையில் பாரதி புத்தகாலயம் அலுவலகத்தில் இருந்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இந்து ராம் கண்டனம்
ரஃபேல் ஊழல் பற்றிய புத்தகங்களை பறிமுதல் செய்தது ஜனநாயக விரோத, சட்டவிரோத நடவடிக்கை. இது கருத்து சுதந்திரம், பேச்சு சுதந்திரத்துக்கு எதிரான செயல் என இந்து என் ராம் கண்டனம் தெரிவித்திருந்தார்.
பிரசாரம் இல்லை
இந்த புத்தகம் குறித்து எஸ் விஜயன் கூறுகையில் இந்த புத்தகத்தை கொண்டு நான் யாருக்கும் தேர்தல் பிரசாரம் செய்ய போவதில்லை. நான் எந்த கட்சியையும் சார்ந்தவர் அல்ல என்றார்.
சாஹூ விளக்கம்
இந்த நிலையில் இதுகுறித்து தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூ கூறுகையில் ரஃபேல் ஊழல் குறித்த புத்தகத்தை பறிமுதல் செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவிடவில்லை. புத்தகங்களை பறிமுதல் செய்தது ஏன் என சென்னை மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் விளக்கம் கேட்டுள்ளோம் என்றார் சாஹூ.
சாஹூ விளக்கம்
இந்த நிலையில் ரஃபேல் ஊழல் குறித்த புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதசாஹூவிடம் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா விளக்கம் கேட்டுள்ளார். அதற்கு சாஹூ கூறுகையில் அந்த புத்தகங்களை நான் பறிமுதல் செய்யவில்லை. வட்டார தேர்தல் பறக்கும் படையினரே புத்தகங்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்களிடம் விளக்கம் கேட்கப்பட்டது. மேலும் புத்தகங்களை உரியவர்களிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்டதாக சாஹூ இந்திய தேர்தல் ஆணையருக்கு விளக்கம் அளித்தார்.