சம்பாதிச்சாச்சு..நமக்கேன் வம்புனு இல்லாமல் துணிந்து குரல் கொடுத்தாய்..சூர்யாவுக்கு சத்யராஜ் வாழ்த்து
Recommended Video
சென்னை: சினிமாவில் வளர்ந்து நிறைய சம்பாதித்தாகிவிட்டது. நமக்கேன் வம்பு என இல்லாமல் குரல் கொடுத்த சூர்யாவுக்கு நடிகர் சத்யராஜ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கை குறித்து கடந்த 13-ஆம் தேதி நடிகர் சூர்யா காட்டமாக பேசியிருந்தது ஆட்சியாளர்களை நிலைக்குலைய செய்தது. இவரது கருத்துக்கு ஆட்சியாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனினும் பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் சூர்யாவின் கருத்துக்கு கே எஸ் ரவிக்குமார், பா ரஞ்சித், கமல்ஹாசன், ரஜினிகாந்த் உள்ளிட்டோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சத்யராஜும் சூர்யாவின் கருத்தை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
பிறந்தநாள்
இதுகுறித்து சத்யராஜ் வெளியிட்ட வீடியோ பதிவில் அவர் கூறுகையில் சூர்யா பிறந்தநாள் வாழ்த்துகள். நீ ஒரு வயது குழந்தையாக இருக்கும் போது உன்னை தூக்கி கொஞ்சியுள்ளேன். உன்னுடைய எத்தனையோ பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ளேன்.
போன்
அதெல்லாம் போன்லயோ வாட்ஸ் ஆப் மூலமாகவோ சொல்லியிருப்பேன். ஆனால் இந்த ஆண்டு பிறந்தநாள் வாழ்த்தை நான் சமூக வலைதளங்களில் சொல்கிறேன். இதற்கு காரணம் உன்னை பார்த்து நான் பெருமைப்படுகிறேன்.
குரல்
சமூக நீதிக்காக நீ குரல் கொடுத்துள்ளாய். ஒரு சராசரி மனிதன் போல் குரல் கொடுத்துள்ளாய். அதிலும் பெரிய அளவில் வளர்ந்து நிறைய சம்பாதித்து விட்டோமேயானால் நமக்கேன் வம்பு என எண்ணத் தோன்றும். எத்தனையோ பேர் குரல் கொடுக்கிறார்கள்.
எதிர்ப்புகள்
சமூக போராளிகளுக்கு பின்னால் நானும் ஓரமாக இருந்து குரல் கொடுத்துள்ளேன். ஆனால் ஒரு கதாநாயகனாக, மாஸ் ஹீரோவாக இருந்து கொண்டு குரல் கொடுப்பதில் நிறைய கஷ்டங்கள், பல எதிர்ப்புகள், பல சங்கடங்கள் இருக்கும்.
அலசி ஆராய்ந்து
இதை அனுபவப்பூர்மாக உணர்ந்திருக்கிறேன். அதனால் நீ இந்த சமூக நீதிக்காக, கல்விக்காக குரல் கொடுத்திருப்பதை நான் மிகவும் பெருமையாக கருதுகிறேன். அதிலும் நுனிப்புல் மேய்வது போல் மேலோட்டமாக எதையும் சொல்லாமல் ஆழமாக இறங்கி அலசி ஆராய்ந்து என்ன சொல்ல வேண்டுமோ அதை நீ பதிவு செய்துள்ளாய்.
சத்யராஜ் வீடியோ
இதனால் இந்த பிறந்தநாளில் உன்னை விட வயதில் பெரியவன் என்ற முறையில் வாழ்த்துகிறேன். துணிச்சலை நான் வணங்குகிறேன் என அந்த வீடியோவில் சத்யராஜ் தெரிவித்துள்ளார்.