கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தாரா சத்யராஜ் மகள் திவ்யா?
சென்னை: நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
திவ்யா கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பயிற்சி பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய திட்டமான அக்ஷய பாத்திரம் என்ற மதிய உணவு திட்டத்தின் தூதுவராக உள்ளார்.
தென்னிந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களில் திவ்யாவுக்கு பிரபல இணையதளம் ஒன்று முதலிடத்தை கொடுத்தது. அதுபோல் இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களின் தர வரிசை பட்டியலில் திவ்யா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.
மருத்துவ துறையில் நடந்து வரும் ஊழல் மற்றும் அலட்சியம் குறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியதை அடுத்து பரபரப்பாக பேசப்பட்டார். அவருக்கு தமிழக மருத்துவ துறை செயலாளர் ராதாகிருஷ்ணனுடன் நல்ல பழக்கம் உள்ளது.
அது போல் அமைச்சர் செங்கோட்டையனை நேரில் சந்தித்த திவ்யா, அரசுப் பள்ளிகளில் மதிய உணவு திட்டத்தை மேம்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்தியிருந்தார். இந்நிலையில் ஒரு நேர்காணலில் அவர் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணுவை பாராட்டி பேசியிருந்தார். இதனால் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பியிருந்தன.
அவர் நேர்காணலில் பேசுகையில் கம்யூனிசம் என்பது சமத்துவதை கட்டமைக்கும். சுரண்டலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும். எனக்கு நல்லகண்ணு ஐயாவை நன்கு தெரியும். ஒரு அரசியல்வாதி எப்படி எளிமையாக வாழ வேண்டும் என்பதற்கு அவர்தான் உதாரணம்.
ஜாதியற்ற சமூக கொள்கைகளை நிலைநிறுத்த அவர் தியாகங்களை செய்வார். தற்போதைக்கு என்னுடைய கவனம் எல்லாம் அக்ஷயா பாத்திரம் என்ற மதிய உணவு திட்டத்தின் மூலம் தமிழகத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட குழந்தைகளுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும் என்பதில்தான் இருக்கிறது என்று தெரிவித்தார்.