சுஜித் மீட்பு பணியில் கவனம்.. நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைப்பு
சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
சென்னை: சிறுவன் சுஜித் ஆழ்துளை கிணற்றில் இருந்து மீட்கப்பட்டு வரும் நிலையில் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார். இவரை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக அரசின் மூன்று அமைச்சர்கள் மீட்பு பணியில் தீவிரமாக கவனம் செலுத்தி வருகிறார்கள்.
மீட்பு பணிகள் நடக்கும் பகுதிக்கு அமைச்சர்கள் விஜயபாஸ்கர், வெல்லமண்டி நடராஜன் மற்றும் வளர்மதி ஆகியோர் இருக்கிறார்கள். அதேபோல் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி அங்குதான் இரண்டு நாட்களாக இருக்கிறார். மேலும் துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் நேற்று இரவில் இருந்து மீட்பு பணி நடக்கும் பகுதியில் இருக்கிறார்.
துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் மீட்பு பணிகளை நேரடியாக கண்காணித்து வருகிறார். தமிழக அரசின் மொத்த கவனமும் தற்போது இந்த சிறுவனை மீட்பதிலேயே இருக்கிறது. இதனால் நாங்குநேரி, விக்கிரவாண்டி அதிமுக வேட்பாளர்கள் பதவி ஏற்பு தள்ளிவைக்கப்பட்டு இருக்கிறது.
விக்கிரவாண்டி, நாங்குநேரி இரண்டிலும் அதிமுக கட்சிதான் இடைத்தேர்தலில் வென்றது. விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் முத்தமிழ்ச்செல்வன் 1 லட்சத்து 13 ஆயிரத்து 428 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி 68,646 வாக்குகள் பெற்றார். 44,782 வாக்குகள் வித்தியாசத்தில் புகழேந்தியை தோற்கடித்து வெற்றி பெற்றார் முத்தமிழ்ச்செல்வன்.
அதேபோல் நாங்குநேரியில் அதிமுக வேட்பாளர் ரெட்டியார்பட்டி நாராயணன் 94,562 வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட ரூபி மனோகரன் 32,333 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார். ரூபி மனோகரன் பெற்ற வாக்குகள் 62,229 ஆகும்.
4 மாதம் முன்.. பஞ்சாப் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன்.. 110 மணி நேரத்திற்கு பின் மீட்கப்பட்ட கதை
இந்த இரண்டு தொகுதிகளிலும் இதற்கு முன் திமுக கூட்டணி வெற்றி பெற்று இருந்தது. தற்போது அதை அதிமுக கைப்பற்றி உள்ளது. தற்போது இதற்கான பதவி ஏற்பு விழா தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது. பதவியேற்பு நாளை நடைபெற இருந்த நிலையில், நவ.1-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டு இருக்கிறது.