எல்லோரும் அடிச்சிக்கிறாங்க.. பார்த்திபனும் சொல்கிறார்.. இனியாவது செய்வோமே மக்களே!
சென்னை: மழை நீரின் ஒவ்வொரு துளியும் தேவாம்ருதமாக தெரிகிறது சென்னை மக்களுக்கு. அந்த அளவுக்கு படாதபாடு பட்டு விட்டார்கள் மக்கள். மரண பயத்தை காட்டி விட்டது இயற்கை.
தண்ணி இல்லாக் காடு என்று அறிவிக்கும் அளவுக்கு நிலைமை போய் விட்டது சென்னை. தண்ணீருக்காக குடம் குடமாக அலைந்து கொண்டுள்ளனர் மக்கள். வான் மழை பொய்த்ததால், பூமியில் நிலத்தடி நீர் வெகுவாக இறங்கிப் போய் குடிக்க சொட்டுத் தண்ணீருக்காக தெருத் தெருவாக அலையும் அவல நிலை.
புறநகர்களில் சற்று பரவாயில்லை. ஆனால் அங்கும் ஏரிகளை காலி செய்து பிளாட் போட்டு விற்று காசு பார்த்து விட்ட கபோதிக் கும்பலால், இன்று அங்கும் நிலத்தடி நீர் இறங்கிப் போய் மக்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.
இந்த நிலையில்தான் மழை நீரின் அருமை பெருமை மக்களுக்குப் புரிய ஆரம்பித்துள்ளது. நீர் நிலைகளை காக்க வேண்டும் என்ற அக்கறை கவலை வரத் தொடங்கியுள்ளது. இன்னும் கூட மக்கள் விழித்துக் கொண்டதாக தெரியவில்லை. பாதி அளவுக்குக் கூட மக்கள் விழிப்படையாமல்தான் உள்ளனர்.
இந்த நிலையில் சமீப காலமாக எப்படியெல்லாம் தண்ணீரை சேமிக்க முடியும் என்பது குறித்து பலரும் சமூக வலைதளங்களில் பதிவுகளைப் போட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த முயன்று வருகின்றனர். அதில் ஒன்றாகவே நடிகர் இயக்குநர் பார்த்திபனின் பதிவைப் பார்க்க முடிகிறது.
Please please please see the full video and forward it to maximum groups, Society, people . Urgent need of today. 🙏 pic.twitter.com/bGSHI9bdny
— R.Parthiban (@rparthiepan) June 29, 2019
இந்த இடத்தில் எப்படி மழை நீரை ஒரு சொட்டு கூட வீணாகாமல் சேகரிக்கிறார்கள் என்பதைக் காட்டும் வீடியோ அது. கொட்டும் மழையின் அத்தனை துளி நீரும் அழகாக ஒரு தொட்டிக்கு கொண்டு போய் சேகரிக்கப்படுகிறது.
இதை அனைவரும் பகிர்ந்து அனைவரும் இதுபோன்ற சேகரிப்பு முறைகளில் இறங்க வேண்டும் என்று பார்த்திபன் அதில் கோரியுள்ளார். பார்த்திபன் சொல்லித்தான் செய்ய வேண்டும் என்று இல்லை. தவித்த வாய்க்கு தண்ணீர் வேண்டும் என்று விரும்பும் யாரும் இதை தானாக முன்வந்து செய்வார்கள், செய்ய வேண்டும் என்பதே நமது கோரிக்கையும் கூட.