10 மணி நேர விசாரணைக்கு பிறகு எழும்பூர் நீதிமன்றத்தில் சயான், மனோஜ் ஆஜர்
சென்னை: முதல்வர் குறித்து அவதூறு பேசியதாக சயான் மற்றும் மனோஜ் ஆகிய இருவரையும் கைது செய்து விமானம் மூலம் சென்னைக்கு கொண்டு வந்த போலீஸார் அவர்களை எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளையின் போது 5 பேர் மர்மமான முறையில் உயிரிழந்துவிட்டனர். இந்த நிலையில் 5 பேர் சாவு என்பது திட்டமிட்ட கொலை என கனகராஜ் கொலையும் சந்தேகத்துக்கிடமானது என்றும் திடுக் தகவலை அடங்கிய வீடியோ ஆவணத்தை தெஹல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் டெல்லியில் கடந்த வெள்ளிக்கிழமை வெளியிட்டார்.
அதில் கொடநாடு எஸ்டேட்டில் இருந்து திருடப்பட்ட, ஒபிஎஸ், தினகரன் உள்ளிட்டோரின் வீடியோ ஆதாரங்கள் இப்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் உள்ளன. எனவேதான் அவர்கள் அமைதியாக உள்ளனர் என மேத்யூஸ் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்தார்.
அப்போது கொள்ளையடிக்க எங்களை அனுப்பியதே முதல்வர்தான் என சயான், மனோஜ் ஆகியோரும் பேட்டியளித்தனர். இந்த நிலையில் அவர்களை பிடிக்க சென்னையிலிருந்து தனிப்படை போலீஸார் நேற்று டெல்லியில் கைது செய்தனர்.
இந்நிலையில் அவர்களை சென்னைக்கு விமானம் மூலம் போலீஸார் அழைத்து வந்தனர். இருவரிடமும் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் 10 மணி நேரம் விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து இருவரும் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.