அமலுக்கு வந்த எஸ்பிஐ வங்கியின் புதிய கட்டண நடைமுறை! குறைந்தபட்ச இருப்பு, பணம் எடுக்கும் அளவு மாற்றம்
Recommended Video
சென்னை: அக்டோபர் 1ம் தேதியான இன்று முதல், பாரத ஸ்டேட் வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுப்பது உள்ளிட்ட பிற சேவைகளுக்கான கட்டண விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன.
நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கி எஸ்பிஐ. இதன் புதிய விதிமுறைகள் 3 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. மெட்ரோ சிட்டிகள், சிறு நகரங்கள் மற்றும் கிராமப்புற கிளைகளுக்கு ஏற்ப இந்த விதிமுறைகள் மாறுபடும்.
ஒரு மாதத்திற்கு, இலவசமாக ஏடிஎம்களில் பணம் எடுக்கும் அளவு 2 முதல் 15 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில், வாடிக்கையாளர்கள், சராசரி குறைந்தபட்ச இருப்புத் தொகை (AMB) என்பது 5000த்திலிருந்து, ரூ.3000 என குறைக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இதைவிட 50 விழுக்காட்டுக்கும் குறைவாக, பணம் இருப்பு வைக்கப்பட்டால், ரூ.10 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 50 முதல் 75 அளவுக்கு குறைவாக இருந்தால் ரூ.12 மற்றும் ஜிஎஸ்டி வசூலிக்கப்படும். 75 சதவீதத்திற்கும், குறைவாக இருப்புத் தொகை இருந்தால், 15 ரூபாய் மற்றும் ஜிஎஸ்டி வரித்தொகை வசூலிக்கப்படும்.
சிறு நகரங்களில் உள்ள எஸ்பிஐ வங்கிகளின் வாடிக்கையாளர்கள், குறைந்தபட்ச சராசரி தொகையாக ரூ.2000 இருப்பு வைத்திருக்க வேண்டும். கிராமப்புற வாடிக்கையாளர்கள் குறைந்தபட்ச இருப்புத் தொகையாக ரூ.1000 வைத்திருக்க வேண்டும்.
RTGS மற்றும் NEFT வாயிலாக மேற்கொள்ளப்படும் ஆன்லைன் பண பரிவர்த்தனைக்கு கட்டணம் கிடையாது. ஆனால், வங்கி கிளைகள் வாயிலாக இவற்றை மேற்கொண்டால் கட்டணம் வசூலிக்கப்படும்.
சராசரி மாத இருப்பை ரூ.25,000 வரை பராமரிக்கும் வாடிக்கையாளர், வங்கி கிளைகளில் இரண்டு முறை இலவசமாக பணம் எடுக்கலாம், சராசரி மாத இருப்பு 25,000 மற்றும் 50,000 வரை இருந்தால், அந்த வாடிக்கையாளர், 10 முறை இலவசமாக பணம் எடுக்கலாம்.
ரூ.50,000க்கு மேல் ரூ.1,00,000 வரை சராசரி டெபாசிட் இருந்தால், 15 முறை வங்கி கிளைகளில் இலவசமாக பணம் எடுக்க முடியும். சராசரி மாத இருப்பு ரூ.1,00,000 க்கு மேல் இருந்தால், கணக்கு வைத்திருப்பவர் எத்தனை முறை வேண்டுமானாலும், கட்டணமின்றி, பணம் எடுக்க முடியும்.