வான மகள் கலங்குகிறாள்.. சோக உடை பூணுகிறாள்.. இனி நீங்கள் வெறும் "நிழல்கள்"தானா பாலு?!
சென்னை: வைரமுத்துவின் முதல் பாடலை பாடியவர் நம்முடைய எஸ்பி பாலசுப்பிரமணியம் தான். 'இது ஒரு பொன்மலை பொழுது' என்று தொடங்கும் அந்த பாடல்களின் ஒவ்வொரு வரியையும் இளையராஜாவின் இசையில் அற்புதமாக பாடியிருப்பார் எஸ்பிபி.
எவ்வளவு மன அழுத்தத்தில் உள்ளவர்கள் கேட்டாலும் இப்பாடல் அருமருந்தாக உள்ளது. 80 களில் மிகப்பெரிய ஹிட் இப்பாடல்தான் . பட்டி தொட்டி எங்கும் ஓடிக்கொண்டிருக்கிறது.
1980களில் வெளியான படம் நிழல்கள். பாரதிராஜா இயக்கத்தில், இளையராஜா இசையமைக்க, வைரமுத்து பாட்டெழுத, எஸ்பிபி பாட உருவான பாடல் தான் இது ஒரு பொன்மாலை பொழுது. பாரதிராஜா, எஸ்பிபி, இளையராஜா, வைரமுத்து ஆகிய நான்கு பேர் கூட்டணி முதல் முதலாக உருவானது இந்த படத்திற்கு பின்னர் தான்.
ராகுல் காந்தி முதல் லதா மங்கேஷ்வர் வரை எஸ்பிபி மரணத்துக்கு இரங்கல்!!
வைரமுத்துவின் முதல் பாடல்
80களில் எல்லாம் இப்போது உள்ளது போல் பாடல்களை வீடியோவில் பார்க்கும் வசதி இல்லை என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. என்ன ஓரு ஈர்ப்பு, என்ன ஒரு கம்பீரமான குரல், என்ன ஒரு வரிகள், என்ன ஒரு இசை, என்ன ஒரு வீடியோ காட்சி அமைப்புகள் என புகழ்ந்து கொண்டே செல்லலாம். அந்த அளவிற்கு 'இது ஒரு பொன்மலை பொழுது' பாடல் அற்புதமாக இருக்கும்.
பொன்மலை சாயல்
கடந்த ஆண்டு விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான 1996 படத்தில் இருக்கும் 'கரை வந்த பிறகே, பிடிக்குது கடலை' பாடலின் காட்சி அமைப்புகள் 'இது ஒரு பொன்மலை பொழுது' பாடலின் சாயல்கள் கொஞ்சும் ஓரமாக இருப்பதை பார்க்க முடியும்.
எஸ்பிபி குரல்
குயில்களின் இசை, கடல் அலைகளின் சத்தம், புல்லாங்குழலின் சத்தம் என இயற்கையின் அத்தனை வரத்தையும் தனது குரலோடு ஒன்றிணைதிருப்பார் எஸ்பிபி. 90களில் அந்தி மாலை பொழுதுகளில் கிராமங்களில் ரேடியாக்களில் ஓடிக்கொண்டே இருக்கும். இப்போதுதான் வீடுகளுக்குள் மட்டும் டிவி சத்தம் கேட்கிறது. அன்றைக்கு பக்கத்து வீட்டில் ரேடியோ ஒடுகிறது என்றால் அந்த தெருவிக்கே கேட்கும். யாரோ ஒருவர் வீட்டில் ரேடியோ மற்றும் ஸ்பீக்கரில் கேட்கும் எஸ்பிபியின் குரலை 90களில் பிறந்த எவரும் மறக்க இயலாது.
பலருக்கும் ரிங்டோன் இதுதான்
40 வருடம் கடந்துவிட்டது. இப்போதும் பொன்மாலை பொழுது பாடலை பல்லாயிரம் பேர் தினமும் கேட்கிறார்கள். பலரது ரிங்டோனாகவும் இன்றைக்கு உள்ளது. எஸ்பிபி இறந்துவிட்டார் என்று தெரிந்த உடனே ஓடிச்சென்று அவரின் குரலை கேட்க டியூடிப்பை திறந்தால் பொன்மாலை பொழுது பாடல் தான் நினைவுக்கு வந்தது. 'பொன்மாலை பொழுது' எப்படி இருக்கும் என்பதை வர்ணித்து வைரமுத்து எழுதிய வரிகளுக்கு உயிர் கொடுத்த பாலசுப்பிரமணியின் இன்று நம்மை விட்டு சென்றுவிட்டார். ஆனால் அவரது குரல் உலகம் உள்ள வரை ஒலித்துக்கொண்டிருக்கும்.