'கைது மிரட்டல்'.. முறையிட்ட அப்போலோ, ஜெ. மரண விசாரணை ஆணையத்துக்கு இடைக்கால தடை
Recommended Video
சென்னை: அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் தொடர்ந்த வழக்கை ஏற்று, ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக தமிழக அரசு ஒய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் சசிகலா மற்றும் அவரது உறவினர்கள், அமைச்சர்கள், அதிகாரிகள் மற்றும் அப்போலோ மருத்துமனை மருத்துவர்கள் ஆகியோரை விசாரித்து வந்தது.
இந்நிலையில் மருத்துவக்குழு அமைக்காமல், ஜெயலலிதாவிற்கு வழங்கப்பட்ட மருத்துவ சிகிச்சைகள் குறித்து விசாரிப்பது முறையல்ல என்று அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்துக்கு தடைவிதிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் வழக்கு தொடர்ந்தது.
பிரதமர் மோடியின் ஹெலிகாப்டரை சோதித்த அதிகாரியை சஸ்பெண்ட் செய்த உத்தரவு ரத்து.. தேர்தல் ஆணையம்
ஆனால் விசாரணை ஆணையம் தரப்பில் 90 சதவீதம் விசாரணை முடிந்த நிலையில் மருத்துவக்குழு அமைக்கக்கோருவதை ஏற்க முடியாது என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சென்னை உயர்நீதிமன்றம் அப்போலோ மருத்துவமனை தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இதையடுத்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது அப்போலோ தரப்பில் , மருத்துவர்கள் ஏற்கனவே உரிய பதில்களை அளித்தவிட்டனர். ஆனால் அடிக்கடி மருத்துவர்களை விசாரணைக்கு அழைக்கிறார்கள். விசாரணைக்கு ஆஜராகவில்லை என மிரட்டுகிறார்கள். விசாரணை ஆணையம் உரிய முறையில் அமைக்கப்படவில்லை என முறையிடப்பட்டது. மேலும் விசாரணை கமிஷனில் ஒருவர் கூட மருத்துவர் இல்லை என்றும் வாதிட்டார். இதையேற்று நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.