Flashback 2018: கள்ள உறவு கிரிமினல் குற்றமல்ல.. இந்தியாவையே புரட்டி போட்ட பரபரப்பு தீர்ப்பு!
கள்ள உறவு தவறில்லை என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்தது.
சென்னை: நாட்டையே திரும்பி பார்க்க வைத்த ஒரு தீர்ப்பு இ.பி.கோ 497!! அதாவது கள்ள உறவு தவறு இல்லை என சுப்ரீம் தீர்ப்பு அளித்தது.
இந்த தீர்ப்பு அளிக்கப்பட்ட உடனேயே நாடெங்கும் சர்ச்சை கிளம்பியது. இப்படி ஒரு தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் சொல்லிவிட்டதே என பெரும்பாலானோர் ஆதங்கப்பட்டார்கள்.
ஆனால் கோர்ட்டின் இந்த தீர்ப்பை நிறைய பேர் சரியாக புரிந்து கொள்ளவே இல்லை. உண்மையிலேயே 497 வகை சட்டம் வரையறுப்பது என்னவென்றால், கணவனோ, மனைவியோ தங்களின் "சம்மதம் இல்லாமல்" வேறொருவருடன் உறவு வைத்து கொண்டால் அது குற்றம், கண்டிப்பாக வழக்கு போடலாம். இந்த சட்டப் பிரிவை நீக்கித்தான் கோர்ட் தீர்ப்பளித்தது.
வழக்கு பதியலாம்
அதே சமயம் அத்தகைய உறவால் பாதிக்கப்படும் கணவனோ, மனைவியோ தங்கள் மண உறவை முறித்து கொள்ள அதுவே போதும் என்றும் கூறப்பட்டது. அதுமட்டும் அல்லாமல், இப்படிப்பட்ட கள்ள உறவால் கணவனோ அல்லது மனைவியோ பாதிக்கப்பட்டு தற்கொலை செய்துகொண்டால், தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதியலாம் என்றும் தீர்ப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. இதைதான் நாம் சரியாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
தற்கொலைகள்
மேலெழுந்தவாரியாக பார்த்தால் இது கள்ளக்காதலுக்கு ஆதரவான தீர்ப்பு போல பலரும் நினைத்து விட்டார்கள். ஒரு சிலர் இதை காரணமாக காட்டி, "கோர்ட்டே கள்ளக்காதல் தப்பில்லைனு சொல்லியாச்சு" என்று கணவன் சொல்ல, மனைவிமார்கள் சிலர் தற்கொலையும் செய்து கொண்டனர்.
ஒருத்திக்கு ஒருவன்
உண்மையிலேயே இந்த தீர்ப்பு, பொதுமைப்படுத்தப்பட்ட விதி அல்ல. அது சூழல்களைப் பொறுத்தது. அதாவது திருமணமான பெண், ஏதோ ஒரு சந்தர்ப்ப சூழ்நிலையால் இன்னொரு ஆணுடன் உறவில் ஈடுபடும்போது அந்த சூழலை வைத்து, இது தண்டனைக்குரிய குற்றச் செயல் அல்ல என்பதுதான் உச்சநீதிமன்றம் கூறியுள்ள தீர்ப்பின் சாராம்சம் ஆகும். அதனால் கள்ளக்காதல் சரி என்று கோர்ட் சொல்லவில்லை. ஒருவனுக்கு ஒருத்தி என்பது எப்படியோ அதுபோலத்தான் ஒருத்திக்கு ஒருவன் என்பதும். அதனால் பாலின சமத்துவம் வர வேண்டும் என்பதுதான் இந்த வழக்கின் அடிப்படையே.
தலையில் கொட்டு
யாரும் யாரோடும் உறவை வைத்து கொண்டு போகலாம் என்பது இந்த தீர்ப்பின் அர்த்தம் இல்லை. சுய ஆளுமை மீட்பு இப்படி ஒரு தீர்ப்பு வழங்க காரணமே பெண்கள் தங்கள் கணவர்களுக்கு போக பொருளாக காட்சி தரக்கூடாது என்றும், சுயஆளுமையை மீட்டெடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலும்தான் என்பதை பலர் இந்த தீர்ப்பு வந்தவுடன் புரிந்து கொள்ளவே இல்லை. அது மட்டும் அல்ல, கணவர்கள் ஒன்றும் எஜமானர்கள் அல்ல என்று ஆண்கள் தலையில் ஒரு கொட்டு வைத்தது சுப்ரீம் கோர்ட். அவ்வளவுதான்.
அதிர்வலை
ஆனால் தம்பதி உறவு என்பது பண்பட்டது... நெறிப்பட்டது... அது என்றுமே நீதிக்கு உட்பட்டதுதான்!! அதை நீதிமன்றம் என்றைக்குமே சிதைக்காது. இந்த கருத்தையும், தீர்ப்பின் அடிப்படையையும் எத்தனை பேர் சரியாக புரிந்து கொண்டார்களோ தெரியவில்லை. ஆனால் 2018-ல் இந்த தீர்ப்பு நிறையவே அதிர்வலையை ஏற்படுத்தி விட்டது.