தமிழில் உச்சநீதிமன்ற தீர்ப்பு.. முதல் தீர்ப்பே ராஜகோபாலுடையது.. படித்து பார்க்காமல் இறந்த அண்ணாச்சி!
Recommended Video
சென்னை: உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்படும் என்ற அறிவிப்பை தொடர்ந்து முதல் முறையாக சரவணபவன் அதிபர் ராஜகோபாலின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் வெளியிட்டுள்ளது. இதை அவர் படித்து பார்க்காமலேயே உயிரிழந்துவிட்டார்.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த ராஜகோபால், சென்னையில் கடந்த 1981-ஆம் ஆண்டு சரவணபவன் ஹோட்டலை திறந்துவைத்தார். இதன் வெற்றி காரணமாக இன்று உலகளவில் ஹோட்டல்களின் ராஜாவாக திகழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் தனது 48-ஆவது வயதில் ஹோட்டல் ஊழியரின் மகளும் இளம்பெண்ணான ஜீவஜோதி மீது ஆசைப்பட்டார். தனது ஆசையை அவரிடம் சொன்னபோது அவர் ஒப்புக் கொள்ளவில்லை. எனினும் அண்ணாச்சியின் ஆசைக்கு ஜீவஜோதியின் குடும்பத்தினர் பச்சைக்கொடி காட்டி விட்டனர்.
கோபம்
எனினும் ஜீவஜோதிக்கு இதில் துளிக் கூட விருப்பமில்லை. இந்த நிலையில் அவர் பிரின்ஸ் சாந்தகுமார் என்பவரை காதலித்து வந்தார். இதையடுத்து காதலித்தவரையே கரம் பிடித்தார் ஜீவஜோதி. இதனால் ராஜகோபால் வெகுண்டெழுந்தார்.
ஆயுள் தண்டனை
பின்னர் சாந்தகுமாரிடம் ஜீவஜோதியை விட்டு விலகுமாறு மிரட்டினார். ஆனால் அவர் முடியாது என்று கூறவே அவரை ஆள் வைத்து கடத்தி மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து தள்ளி கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடந்த 2009-ஆம் ஆண்டு ஆயுள் தண்டனை விதித்தது.
ஆயுள் தண்டனை உறுதி
இந்த தண்டனையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ராஜகோபால் மேல்முறையீடு செய்தார். அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த மார்ச் 29-ஆம் தேதி அவரது ஆயுள் தண்டனையை உறுதி செய்தது.
உச்சநீதிமன்றத் தீர்ப்பு
இதனிடையே உச்சநீதிமன்றத் தீர்ப்புகள் அனைத்தும் பிராந்திய மொழிகளிலும் வெளியிடப்பட வேண்டும் என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உச்சநீதிமன்ற கூடுதல் கட்டடத் திறப்பு விழாவில் ஆதங்கப்பட்டார். இதையடுத்து உச்சநீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளின் விவரங்கள் இந்தி, ஒடியா, அசாமி, தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் மாற்றம் செய்யப்பட்டு நீதிமன்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
முதல் தீர்ப்பு
இதில் தெலுங்கும், கன்னடமும் இடம்பெற்றிருந்த நிலையில் அதற்கெல்லாம் மூத்த மொழியான தமிழ் மொழி இடம்பெறாதது பெரும் எதிர்ப்பை கிளப்பியது. இந்த நிலையில் முதல் முறையாக இரண்டு தீர்ப்புகளை தமிழ் மொழியில் உச்சநீதிமன்றம் மொழிபெயர்த்துள்ளது. அதில் முதல் தீர்ப்பே சரவணபவன் ராஜகோபாலின் தீர்ப்புதான். இன்று இணையதளத்தில் வெளியாகியுள்ள தீர்ப்பை படித்து பார்க்காமலேயே ராஜகோபால் மறைந்துவிட்டார்.