டாஸ்மாக் - கடைகளை மூட உத்தரவிட்ட ஹைகோர்ட் ஆணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
சென்னை: தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளது.
Recommended Video
லாக்டவுன் அறிவிக்கப்பட்டதால் நாடு முழுவதும் மதுபான கடைகள் மூடப்பட்டன. தமிழகத்திலும் மார்ச் 25-ந் தேதி முதல் டாஸ்மாக் மதுபான கடைகள் மூடப்பட்டன.
ஏப்ரல் 20-ந் தேதி முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. இதனால் பல மாநிலங்களில் அடுத்தடுத்து மதுபான கடைகள் திறக்கப்பட்டன. தமிழகத்திலும் மே 7-ந் தேதியன்று டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்கப்பட்டன.
காற்றில் பறந்த நிபந்தனைகள்
ஆனால் டாஸ்மாக் மதுபான கடைகளை திறக்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அனுமதித்த போது பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகள் எதுவுமே மே 7-ந் தேதியன்று கடைபிடிக்கப்படவில்லை. மதுபான கடைகளில் பல கிலோ மீட்டர் தொலைவுக்கு குடிமகன்கள் நீண்ட வரிசைகளில் நெருக்கடியடித்துக் கொண்டு நின்றனர். ஒருவருக்கு ஒரு பாட்டில் என்கிற நிபந்தனை மீறப்பட்டு 10-க்கும் மேற்பட்ட பாட்டில்கள் வழங்கப்பட்டன.
மதுகடைகளை மூட உத்தரவு
அதேபோல் ஆன்லைனில் மதுபானங்களை விற்பதற்கான எந்த நடவடிக்கையையும் தமிழக அரசும் மேற்கொள்ளவில்லை. இந்த நிபந்தனை மீறல்கள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மீண்டும் முறையீடு செய்யப்பட்டது. இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டது. மே 7 மற்றும் மே 8 ஆகிய 2 நாட்கள் மட்டுமே டாஸ்மாக் மதுபான கடைகள் இயங்கின.
தமிழக அரசு மேல்முறையீடு
இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் தடை உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தது. அதேபோல் பல்வேறு தரப்பினரும் கேவியட் மனுவையும் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர். தமிழக அரசைப் பொறுத்தவரையில் நிபந்தனைகள் கடைபிடிக்கப்பட்டன; சமூக விலகல் முறையாக பின்பற்றப்பட்டது; நீண்ட காலத்துக்குப் பின் கடைகள் திறந்ததால் முதல் நாள்தான் கூட்டம் வந்தது என விளக்கம் அளித்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
தமிழக அரசு தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவில் பிழைகள் இருப்பதாக உச்சநீதிமன்றம் சுட்டிக் காட்டியது. இதனால் மீண்டும் புதியதாக தமிழக அரசு மனுத் தாக்கல் செய்தது. இந்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெற்றது. இன்றைய விசாரணையின் போது, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. இதனையடுத்து தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் திறக்க வாய்ப்பு உள்ளது.