வெளுத்து வாங்கும் மழை.. பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. முழு விபரம்!
இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை: கனமழை காரணமாக இன்று பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. நாகை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டு உள்ளது.
கனமழை காரணமாக விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர். அறிவிப்பை மீறி பள்ளிகளை நடத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஆட்சியர்கள் சார்பாக அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
நகரும் காற்றழுத்தம்..3 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..யாருக்கெல்லாம் குடை அவசியம்
வங்கக்கடல்
வங்கக்கடலில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று இரவு வலுப்பெற்றுது. திரிகோணமலைக்கு அருகே காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டு இருந்தது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து இன்று அதிகாலை கரையை கடந்தது. தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாழ்வு பகுதியாக மாறி அதன்பின் தாழ்வு மண்டலமாக மாறி உள்ள நிலையில் இது கொஞ்சம் கொஞ்சமாக நகர தொடங்கி இலங்கை கடற்பகுதிக்கு வந்தது. இதையடுத்து நேற்று கரையை கடக்க வேண்டிய தாழ்வு மண்டலம் கரையை நேற்று இரவு வரை கடக்கவில்லை.
இன்று கடக்கும்
இன்று அதிகாலைதான் இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்தது. இந்த தாழ்வு மண்டலம் காரணமாக நேற்று வரை தமிழ்நாட்டில் பெரிய மழை பெய்யவில்லை. டெல்டா மாவட்டங்களிலும், கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்தது. நேற்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் இந்த தாழ்வு மண்டலம் நகர்ந்தது. அதை தொடர்ந்து மேற்கு-தென்மேற்கு திசையில் இன்று அதிகாலை நகர்ந்து கரையை கடந்ததாக என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதையடுத்து நேற்று இரவு தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை விட்டு விட்டு பெய்து.
இன்று மழை
இன்று அதிகாலையில் இருந்து டெல்டா மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. திருவாரூர், திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அதிகாலையில் இருந்து அங்கு மழை விடாமல் பெய்து வருகிறது. இதையடுத்தே டெல்டா மாவட்டங்களில் பல்வேறு மாவட்டங்களுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்றும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் காலையில் இருந்து கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது.
கனமழை
இன்று அதிகாலை இலங்கையில் திருகோணமலைக்கு அருகே இந்த தாழ்வு மண்டலம் கரையை கடந்த நிலையில் நிலப்பகுதியை எட்டியதும் அதன் வலிமை குறைந்தது. இதனால் இலங்கையில் கனமழை பெய்து வருகிறது. சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தென் தமிழக மாவட்டங்களில் அநேக இடங்களிலும், வட தமிழக மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் சென்னையில் பிற்பகலுக்கு பின் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.