சிந்தனையில் மாற்றம்! சமூகத்தின் ஏற்றம்! ஆவின் பால் பாக்கெட்களில் பள்ளிக் கல்வித்துறை பளிச் வாசகம்!
சென்னை: உலக மாற்றுத்திறனாளிகள் தினமான இன்று, ஆவின் பால் பாக்கெட்களில் சிந்தனையில் மாற்றம், சமூகத்தின் ஏற்றம் என்ற பளிச் வாசகத்தை அச்சிட்டு வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.
மேலும், மாற்றுத் திறனாளி குழந்தைகள் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியிருப்பது போன்ற கார்ட்டூனும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
ஆவின் பால் பாக்கெட்களில் இடம்பெற்றிருந்த வாசகமும், கார்ட்டூனும் உலக மாற்றுத்திறனாளிகள் நாள் குறித்த விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியது.
சிந்தனையில் மாற்றம், சமூகத்தில் ஏற்றம்.. உலக மாற்றுத்திறனாளிகள் தினம்.. முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து
உலக மாற்றுத்திறனாளிகள் நாள்
ஆண்டுத்தோறும் டிசம்பர் மாதம் 3ம் நாள் உலக மாற்றுத்திறனாளிகள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சம உரிமையுடன், வாழ்வதற்கு ஏற்ற சூழலை அமைத்து, அவர்களுக்கு உரிய வாய்ப்பினை வழங்க அனைவரும் உறுதி மேற்கொள்வதுடன், இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்காக போதுமான விழிப்புணர்வை சமுதாயத்தில் ஏற்படுத்தும் விதமாக இந்த நாள் அமைந்துள்ளது.
பாராட்டி ஊக்கப்படுத்தும் விழா
இந்நாளில், மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்த ஏதுவாக விளையாட்டுப் போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களைப் பாராட்டி ஊக்கப்படுத்தும் விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும் மாற்றுத்திறனாளிகள் சேவையினை ஊக்குவிக்கும் வகையில் மாநில விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
பளிச் வாசகம்
இதனிடையே தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் ஆவின் பால் பாக்கெட்களில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி சிந்தனையில் மாற்றம், சமூகத்தின் ஏற்றம் என்ற வாசகம் அச்சிடப்பட்டு விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் மாற்றுத் திறனாளி குழந்தைகள் தமிழக அரசுப் பள்ளிகளில் கல்வி கற்பதற்கு உகந்த சூழலை பள்ளிக்கல்வித்துறை உருவாக்கியிருப்பது குறித்த படமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
சைகை மொழி
மேலும் எல்லாவற்றுக்கும் மேலாக காது கேளாத மற்றும் பேச முடியாத மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு புரியும் வகையில் சைகை மொழி தமிழ் தாய் வாழ்த்துப் பாடல் இன்று சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.