முரண்பாட்டின் மொத்த உருவமாக ஆன்லைன் வகுப்புகள்... சொதப்பும் பள்ளிகள்... தவிக்கும் பிள்ளைகள்..!
சென்னை: ஆன்லைன் வகுப்புகள் என்ற பெயரில் தனியார் பள்ளிகள் வசூலிக்கும் கட்டணங்களில் ஒரு பகுதியை கூட அதில் பணியாற்றும் ஆசிரியர் பெருமக்களுக்கு வழங்குவதில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
மேலும், தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கு ஒரு கட்டணம் பள்ளி திறந்த பிறகு ஒரு கட்டணம் என்ற முரண்பட்ட நிலையையும் பல இடங்களில் காண முடிகிறது.
இவைகள் ஒரு புறம் இருக்க, ஸ்மார்ட் போன் வாங்குவதற்கு வசதியற்ற ஆயிரக்கணக்கான மாணவர்களை ஆன்லைன் வகுப்புகள் அல்லல்பட வைத்துள்ளன.
முதல்வரிடம் இருந்து வந்த சர்ப்ரைஸ்.. ஒரே நாளில் இரண்டு சூப்பர் அறிவிப்புகள்.. குவியும் பாராட்டு!
சம வாய்ப்பு
மாணவர்களுக்குள் ஏற்றத்தாழ்வு ஏற்படக் கூடாது என்பதற்காக தான் பள்ளிகளில் சீருடை அணிவது கட்டாயமாக உள்ளது. கல்வி கற்கும் முறையில் அனைவரும் சமம் என்பதை போதிக்கும் வகையில் சீருடையை கொண்டு வந்த பள்ளி நிர்வாகங்கள் இன்று அறம் தவறி செயல்படுகிறதோ என்ற ஐயத்தை எழுப்புகிறது. விடாகொண்டான் கொடாகண்டன் கதையாக அடாது கொரோனா பேரிடரிலும் விடாது ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன தனியார் பள்ளிகள்.
வசதியற்ற பெற்றோர்
ஸ்மார்ட்போன் அல்லது லேப்டாப் ஆன்லைன் வகுப்புகளுக்கு மிக முக்கியமானது. இவை இரண்டும் அனைத்து வீடுகளிலும் இருக்கும் என்ற உறுதி கிடையாது. இன்னும் சொல்லப்போனால் இந்தப் பொருட்களை பற்றி அறியாத அவை எப்படி இருக்கும் எனக் கூடத் தெரியாத மாணவர்களும், பெற்றோர்களும் தமிழகத்தில் ஏராளம். இப்படிப்பட்ட சூழலில் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவதால் மாணவர்களுக்கான சம உரிமை பறிக்கப்படுகிறது.
இலவச ஸ்மார்ட் போன்
கொரோனா தொற்று காலத்தை மனதில் கொண்டு பஞ்சாப் மாநிலத்தில் 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு இலவச ஸ்மார்ட் போன்களை வழங்கியுள்ளார் அம்மாநில முதலமைச்சர் அம்ரீந்தர் சிங். இதை எதற்காக வழங்கியுள்ளார் என்பதை ஆழமாக சிந்தித்து பார்த்தால் அதில் உள்ள தொலைநோக்கு புரியும்.
ஆராயாமல் முடிவு
ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்கும் வகையில் அனைத்து மாணவர்களுக்கும் வசதி இருக்கிறதா (வசதி என்றால் பணம், பொருள் இல்லை - தொலை தொடர்பு, இணையவசதி) என்பதை ஆராயாமல் ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுவது தான் இங்கு சிக்கலை எழுப்புகிறது. அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை வழங்கப்படாத கல்வி மாணவ சமுதாயத்தினர் இடையே தாழ்வு மனப்பான்மையையும், ஏற்றத்தாழ்வையும் தான் ஏற்படுத்தும்.
ஆசிரியர் பெருமக்கள்
இதில் ஆசிரியர் பெருமக்களை குறை சொல்வதற்கு ஒன்றுமில்லை. நிர்வாகம் எடுக்கும் முடிவுகளுக்கு கட்டுப்பட்டு அவர்கள் பணி ஆற்றுகிறார்கள். நிழலும் நிஜமும் ஒன்றாகாது என்பதை சீர்தூக்கிப் பார்த்து அனைத்து மாணவர்களுக்கு கல்வி கற்கும் முறையில் சம வாய்ப்பை அரசு ஏற்படுத்திக் கொடுத்து ஆரோக்கியமான சமுதாயத்திற்கு வழிவகுக்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாகும்.