அரசுடன் பேச்சு வார்த்தை தோல்வி.. டிச. 4 முதல் போராட்டத்தில் குதிக்கிறது ஜாக்டோ-ஜியோ
சென்னை: டிசம்பர் 4ம் தேதி முதல் ஜாக்டோ ஜியோ ஊழியர்கள் போராட்டத்தில் குதிக்க முடிவு செய்துள்ளனர்.தமிழக அரசுடன் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து போராட்டம் அறிவிக்கப்பட்டது.
7 அம்ச கோரிக்கைகள் நிறைவேறும் வரையில் டிசம்பர் 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாக ஜாக்டோ-ஜியோ அறிவித்து இருந்தது.
ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வரவேண்டும் என்பது போன்றவை கோரிக்கைகள் ஆகும். பலமுறை போராட்டம் நடத்தியும், அரசு இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்துவது என்று ஏற்கனவே ஜாக்டோ-ஜியோ ஒருமித்த முடிவு எடுத்தது.
அதன்படி, இன்று அமைச்சர்கள் குழுவுடன் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததை அடுத்து திட்டமிட்டபடி டிசம்பர் 4ம் தேதி தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் கோரிக்கை நிறைவேறும் வரை நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது .
ஜாக்டோ-ஜியோவில் 25 ஆசிரியர் சங்கங்கள், 30 அரசு பணியாளர் சங்கங்கள், ஏற்கனவே இருந்த 74 அரசு ஊழியர் சங்கங்கள், தற்போது இணைந்த சங்கங்கள் என மொத்தம் 165 சங்கங்கள் ஒருமித்து 4ம் தேதி முதல் தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.