கொரோனா காலத்திலும் பல மாநிலங்களில் பள்ளிகள் திறப்பு - மகிழ்ச்சியுடன் வந்த மாணவர்கள்
சென்னை: ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. பெற்றோர் சம்மதத்துடன் விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு இன்று வகுப்புகள் நடைபெற்றன.
நாடு முழுவதும் கொரோனாவிற்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 55 லட்சம் பேரை பாதித்துள்ளது.
கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வந்தாலும், குணமடைந்து வருபவர்களின் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
லாக்டவுனால் மக்கள் பல்வேறு இழப்புகளைச் சந்தித்துள்ளனர். வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் வரும் 30ஆம் தேதி வரை அமலில் இருந்தாலும் படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அன்லாக் 4.0 தற்போது அமல்படுத்தப்பட்டு வருகிறது.
செப்டம்பர் 21 முதல் விருப்பத்தின் பேரில் 9 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்கள் பள்ளிகளுக்கு செல்லலாம் என மத்திய அரசு அறிவித்தது.
அதன்படி ஆறு மாத இடைவெளிக்குப் பிறகு, ஆந்திரா, கர்நாடகா, அசாம், மிசோரம், நாகலாந்து, மேகாலயா, ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், அரியானா, இமாச்சல பிரதேசம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன. விருப்பத்தின் பேரில் வரும் மாணவர்களுக்கு வகுப்புகள் நடைபெற்றன.
தனி மனித இடைவெளியுடன் மாணவர்கள் அமரவைக்கப்பட்டனர். உடல் வெப்பப் பரிசோதனை செய்யப்பட்டது. முக கவசம் அணிந்து மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்திருந்தனர். பல மாதங்களுக்கு பிறகு பள்ளிக்கு வந்து நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
மாணவர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு 9, 10,11,12 மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு வழக்கமான வகுப்புகள் நடக்காது. ஆனால், பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் சந்தேகங்களை போக்குவதற்காக இருப்பார்கள் என்று கர்நாடக மாநில கல்வியமைச்சர் கூறியுள்ளார்.
திருமணமானவர்கள் இளம்பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தால் கடும் தண்டனை - ஹைகோர்ட்
தமிழகத்தில் எப்போது பள்ளிகள் திறக்கப்படும் என்று உறுதியாக யாராலும் சொல்ல முடியவில்லை. கல்வியமைச்சர் இதுவரை பள்ளிகள் திறப்பது பற்றி எந்த முடிவும் எடுக்கவில்லை என்றே கூறியுள்ளார். பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெறுகின்றன. தற்போது ஆன்லைன் வகுப்புகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அண்டை மாநிலங்களைப் பார்த்து தமிழகத்திலும் விரைவில் பள்ளிகள் திறக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.