ஞாபகம் வருதே.. நெஞ்சில் புதைந்த நினைவுகள் எல்லாம்.. பள்ளிக்கு வந்த 10, 12ம் வகுப்பு மாணவர்கள்!
சென்னை: கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள், ஒன்பது மாத இடைவெளிக்குப் பிறகு உரிய பாதுகாப்பு வசதிகளுடன் இன்று திறக்கப்பட்டது. பொதுத்தோ்வை சந்திக்க போகும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு மட்டும் வகுப்புகள் தொடங்கி உள்ளது.
Recommended Video
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. கடந்த 9 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது.
அண்மையில் பள்ளிகளில் பெற்றோர்களிடம் இரண்டாம் கட்ட கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளைத் திறக்க விருப்பம் தெரிவித்து இருந்தார்கள்.
அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொத்துக்கொத்தாக மரணம்.. பீதியை கிளப்பும் கொரோனா
பாதுகாப்பு ஏற்பாடுகள்
இதையடுத்து பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. பள்ளிகள் திறப்பதற்கு முன் மாணவா்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்வது, கிருமிநாசினி வைப்பது, இடைவெளிவிட்டு அமர வைப்பது, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. அதன்படி பள்ளிகள் சுத்தம் செய்யப்பட்டன.
இன்று திறப்பு
மேலும் 6 மாதங்கள் பள்ளிகள் திறக்கப்படாததால் மாணர்களின் சுமையை குறைக்க பாடங்களை குறைக்கவும் முடிவெடுக்கப்பட்டு பாட வாரியாக குறைக்கப்பட்டு அதன் விவரங்களையும் பள்ளிக்கல்வித்துறை கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது. இதையடுத்து அறிவித்தபடி ஒன்பது மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டது.
சத்து மாத்திரைகள்
பள்ளிக் கல்வித் துறை இயக்குநா் எஸ். கண்ணப்பன், சென்னை ஷெனாய் நகரில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றை ஆய்வு செய்துவிட்டு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில். 'மாணவா்கள் பள்ளிகளுக்கு வருவதற்கு விழிப்புணா்வு ஏற்படுத்துவது, சுகாதாரம் குறித்த விழிப்புணா்வு, பொதுத்தோ்வு எழுதுவதற்கான மனதளவில் பயிற்சி எடுப்பது குறித்து ஆலோசனைகள் அளிக்கப்படும். மாணவா்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க சத்து மாத்திரைகள் வழங்கப்படும். வாரம் ஒருமுறை மாணவா்கள் உடல்நிலை பரிசோதனை நடத்தப்படும்' என்றார்.
கடினமான பாடங்கள் நீக்கம்
இதனிடையே பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதால் போட்டித் தோ்வை எதிர்கொள்வதில் மாணவா்களுக்கு எந்த சிக்கலும் இருக்காது என்று ஆசிரியா்கள் தரப்பில் கூறப்படுகிறது. மேலும் மாணவா்களின் நலனை கருத்தில் கொண்டு, முக்கிய மற்றும் எளிதான பகுதிகள் நீக்கப்படாமலும், சற்றுக் கடினமான பகுதிகளை நீக்கியும் பாடத்திட்டம் வடிவமைக்கப்பட்டிருப்பதாகவும், பாடத்திட்டம் 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.