பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா? நவ.9ல் தமிழக அரசு கருத்துக்கேட்பு கூட்டம்
சென்னை: கொரோனா அச்சம் உள்ள இந்த சூழ்நிலையில் பள்ளிகளை திறக்கலாமா வேண்டாமா என்று பெற்றோர்களிடம் தமிழக அரசு கருத்துக்களை கேட்கிறது. நவம்பர் 9ஆம் தேதி பெற்றோர்கள் தங்களின் கருத்துக்களை கூறலாம். நேரில் வர முடியாதவர்கள் கடிதம் மூலம் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று அரசு தெரிவித்துள்ளது.
பொது முடக்கம் காரணமாக மார்ச் மாதம் முதல் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன. மத்திய அரசு அனுமதி வழங்கிய நிலையில் கடந்த மாதமே பல்வேறு மாநிலங்களில் வகுப்புகள் தொடங்கின.
இதனைத்தொடர்ந்து தமிழக அரசு அக்டோபர் 31ஆம் தேதி வெளியிட்ட அறிவிப்பில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் நவம்பர் 16ஆம் தேதி திறக்கப்படும் என அறிவித்தது.
9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் முதற்கட்டமாக வகுப்புகள் தொடங்கப்படும் என அறிவித்தது. இதைத் தொடர்ந்து பள்ளிகள் திறக்கப்படும் போது பின்பற்றப்படவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் அதிகாரிகளோடு சில தினங்களுக்கு முன்பு ஆலோசனை நடத்தினார்.
பள்ளிகள் திறக்கப்படுவதற்கு பெற்றோர் ஆசிரியர் கழகத்தினரும், எதிர்கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். கொரோனா இரண்டாம் அலை பரவும் சூழ்நிலையில் மாணவர்கள் உயிருடன் விளையாட வேண்டாம் என்று அறிக்கை வெளியிட்டனர்.
இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடன் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் ஆகியோர் இன்று ஆலோசனை நடத்தினர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பது குறித்து வரும் 9ஆம் தேதி கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற இருப்பதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழக அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கை:
பள்ளிகள் திறப்பது குறித்து கருத்துகளை பெற்றிட வரும் 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கருத்துக்கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது. அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் தலைமையில் காலை 10 மணிக்கு கருத்து கேட்பு கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகிறதா? பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் முக்கிய ஆலோசனை
இந்த கருத்து கேட்பு கூட்டங்களில் 9 முதல் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம். கலந்துகொள்ள இயலாதவர்கள் கடிதம் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம்.