தமிழகத்தில் பிப். 1 முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறப்பு- அமைச்சர் அதிரடி அறிவிப்பு
சென்னை: தமிழகத்தில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து வகுப்புகளுக்கும் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பரவல் கடந்த ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா 3ஆவது அலை தீவிரமடைந்தது. இதன் காரணமாக ஜனவரி 1ஆம் தேதிமுதல் கேஸ்கள் உயர்ந்து கொண்டே வந்தனர்.
கொரோனா பரவல், ஓமிக்ரான் பரவலை தடுக்க கடந்த ஜனவரி 6ஆம் தேதி முதல் கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்தது. அதன்படி இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
மெட்ரோ ரயில்கள் இயங்காது
இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் பொது போக்குவரத்து, மெட்ரோ ரயில் சேவை இயங்காது என அறிவிக்கப்பட்டது. அன்றைய தினம் மளிகை கடைகள், இறைச்சிக் கடைகள், சலூன் கடைகள் உள்ளிட்டவை திறக்கவும் அனுமதி மறுக்கப்பட்டது. அது போல் திருமண நிகழ்ச்சிகளுக்கும் இறப்பு நிகழ்ச்சிகளும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
தமிழகத்தில் 1 முதல் 9 ஆம் வகுப்பு
மேலும் 1 முதல் 9ஆம் வகுப்பு வரை நேரடி வகுப்புகளுக்கு ஜனவரி 31 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டது. பொதுத் தேர்வு எழுதுவோரின் நலன் கருதி 10,11, 12 நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிமன்றத்தில் பொது நலன் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளி ஊழியர்களின் நலன் கருதி 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புக்கு தடைவிதிக்கப்பட்டது.
முழு ஊரடங்கு
இந்த தடைகள் வரும் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வருகிறது. கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்துவதா அதிகரிப்பதா என்பது குறித்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. அப்போது 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு
இந்த நிலையில் வரும் 1ஆம் தேதி முதல் தமிழகத்தில் அனைத்து வகுப்புகளும் திறக்க முடிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார். மேலும் கொரோனா பரவல் குறைந்து வருவதை அடுத்து பள்ளிகள் திறக்கும் முடிவை பள்ளிக் கல்வித் துறை எடுத்ததாகவும் அவர் தெரிவித்தார்.