கொரோனாவுக்கு மருந்து இல்லை...செப்டம்பரில் பள்ளிகள் திறப்பா?
சென்னை: கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு, முன்பு எடுக்கப்பட்ட மதிப்பெண்கள் அடிப்படையில் கடந்தாண்டு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளை அறிவிக்குமாறு மாநில மற்றும் மத்திய அரசுகள் உத்தரவுகள் பிறப்பித்து உள்ளன.
இந்த நிலையில் நடப்பாண்டில் எப்போது பள்ளிகள் துவங்கும், பாடங்கள் எந்தளவுக்கு குறைக்கப்படும் போன்ற விவாதங்கள் அவ்வப்போது எழுந்தது. மத்திய அரசின் அறிவிப்புக்கு தமிழக அரசு காத்துக் கொண்டு இருந்தது. மாணவர்களும் தேர்வு நடக்குமா? நடக்காதா? ஓராண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுமா? ஆன் லைன் தேர்வு வைக்கப்படுமா போன்ற கேள்விகளை எழுப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான் நடப்புக் கல்வி ஆண்டில் பள்ளிகள் திறப்பது தாமதம் ஆனது. இறுதியாக, நடப்பு கல்வி ஆண்டில் 9 ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களின் பாடச்சுமை 30 சதவீதம் வரை குறைக்கப்படும் என்று மத்திய சிபிஎஸ்இ அறிவித்தது. இது ஓராண்டுக்கு மட்டும் பொருந்தும் என்றும் தெரிவித்து இருந்தது.
இதைத் தொடர்ந்து, 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை 30 சதவிகித பாடங்கள் குறைக்கப்படும் என்று தமிழக அரசும் அறிவித்து இருந்தது. இதையொட்டி ஆன் லைன் வகுப்புகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதற்கிடையே எப்போது பள்ளிகளை திறக்கலாம் என்பது குறித்து பெற்றோர்களிடம் ஆலோசனை கேட்குமாறு அனைத்து மாநில பள்ளிக் கல்வி செயலகத்திடம் கடந்த வாரம் மத்திய மனிதவளத்துறை அமைச்சகம் கேட்டு இருந்தது. ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் ஆகிய மாதங்களில் எந்த மாதத்தில் பள்ளிகளை திறக்கலாம், மேலும் எது மாதிரியான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் போன்ற ஆலோசனைகளையும் கேட்டு இருந்தது.
பெற்றோரிடம் இருந்து ஆலோசனைகளைப் பெற்று ஜூலை 20 ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று மாநில கல்வி செயலகங்களை மத்திய மனித வள அமைச்சகம் கேட்டுக் கொண்டு இருந்தது. இந்த ஆலோசனைகளைப் பெற்ற பின்னர் மத்திய அரசு அறிவிப்பை வெளியிடும் என்று கூறப்படுகிறது.
இலவச கல்வி திட்டத்தில் பட்டப்பிடிப்பு படிக்க ஆசையா.. சென்னை பல்கலைக்கழகம் சூப்பர் அறிவிப்பு
இதற்கிடையே, வரும் செப்டம்பர் மாதம் உயர்நிலைப் பள்ளிகளை திறப்பது குறித்த அறிக்கையை சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு மத்திய மனித வள அமைச்சகம் அனுப்பி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
Recommended Video
கொரோனாவை கட்டுப்படுத்தும் தடுப்பு மருந்து ஆய்வில் இருக்கும் நிலையில், பள்ளிகள் திறந்தால், மாணவர்களுக்கு எந்த வகையில் பாதுகாப்பு இருக்கப் போகிறது என்ற கேள்வியை பெற்றோர் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். மாணவர்கள் தங்களை உரிய வகையில் பாதுகாத்துக் கொள்வார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.