கொலைக் களமான கூர்நோக்கு இல்லம்? மூடிமறைத்த அதிகாரிகள்! தமிழக அரசுக்கு பறந்த கோரிக்கை!
சென்னை : செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சிறுவன் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில்
குற்றவாளிகளையும், ஆதாரங்களையும் மூடி மறைக்க முயன்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழக அரசுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில்," செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் கன்னடப்பாளையம் குப்பைமேடு பகுதியை சேர்ந்த கணவரை இழந்த பிரியா என்பவரது மூத்த மகன் 17 வயது கோகுல்ஸ்ரீ என்பவரை, கடந்த டிசம்பர் 30 அன்று தாம்பரம் ரயில்வே போலீசார் திருட்டு சந்தேகத்தின் பேரில் பிடித்து வைத்து, அவரது தாயாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
அவரது தாயார் அவரை அங்கு சென்று பார்த்த போது சிறுவன் கோகுல்ஸ்ரீ நன்றாகவே பேசியுள்ளார். பின்னர் கோகுல்ஸ்ரீ செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்ட நிலையில், 31-ம் தேதி மாலையில் சிறுவனின் உடல்நிலை சரியில்லை என்று செங்கல்பட்டு அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களத்துல சந்திப்போம்.. விடாப்பிடி எடப்பாடி! மல்லுகட்டும் ஓபிஎஸ்.. மீண்டும் பருத்தி மூட்டை குடோன் கதை!
சிறுவன் பலி
பின்னர் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இறுதியில் இறந்துவிட்டதாகவும் அடையாளம் தெரியாத சிறுவர் கூர்நோக்க இல்ல அதிகாரி மூலம் சிறுவனின் தாயார் பிரியாவுக்கு தகவல் கூறியுள்ளனர். நீண்ட போராட்டத்திற்கு பின்னர் சிறுவனின் தாயார் மருத்துவமனையில் இருந்த சிறுவனை பார்த்த போது உடல் முழுவதும் காயங்கள் இருந்துள்ளதை பார்த்துள்ளார். ஆனால், தாயாரின் செல்போனை பிடுங்கிக்கொண்டு அவரை சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் அங்கு பணிபுரியும் ஒருவருக்கு சொந்தமான இடத்தில் அடைத்து வைத்துள்ளனர்.
அதிகாரிகள் மிரட்டல்
ஜனவரி 2 அன்று மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் என்பவர் நேரடியாக வந்து அவரை மிரட்டியுள்ளார். சூழலை பயன்படுத்தி அப்போது தப்பிய அவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று புகார் அளித்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தியுள்ளார். உடற்கூறாய்வில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்த நிலையில், செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்ல ஊழியர்கள் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மனித உரிமை மீறல்
சிறுவன் கோகுல்ஸ்ரீ திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாகவே அவரது தாயார் கருதுகிறார். கோகுல்ஸ்ரீ உடல் மீது இருந்த காயங்கள் அதனை உறுதிபடுத்துகிறது. செங்கல்பட்டு சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் அவர் கடுமையாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். இந்த சூழலில் சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் குற்றச் செயலை மூடி மறைக்க முயன்றுள்ளனர். இது அப்பட்டமான மனித உரிமை மீறல் இச்செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. உடனடியாக விசாரணை மேற்கொண்டு தவறிழைத்தவர்கள் பணி நீக்கம் செய்யப்பட வேண்டும்,
அதிகாரிகள்
குற்றத்தில் ஈடுபட்டவர்களில் சிலர் கைது செய்யப்பட்டாலும், குற்றத்தை மறைக்க முயன்ற சிறுவர் கூர்நோக்கு இல்ல அதிகாரிகள் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார் உள்ளிட்டோர் இன்னும் கைது செய்யப்படவில்லை. இவர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்யப்பட வேண்டுமெனவும், குற்றவாளிகளிள் தப்பிவிடாதபடி வழக்கு தொடர்பான ஆவணங்களையும், ஆதாரங்களையும் விரைவாக கைப்பற்ற வேண்டும் எனவும் எஸ்.டி.பி.ஐ. கட்சி வலியுறுத்துகிறது
கஸ்டடி மரணம்
தமிழகத்தில் தொடரும் சிறை கஸ்டடி மரணத்தின் வரிசையில் தற்போது சிறுவர் கூர்நோக்கு இல்லத்திலும் கொலை நடைபெற்றுள்ளது அதிர்ச்சியளிக்கிறது. இத்தகைய செயல்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட வேண்டும். உடனடியாக தமிழகம் முழுவதும் உள்ள சிறுவர் கூர்நோக்கு இல்லங்களில் உள்ள சிறுவர்களிடம் விசாரணை மேற்கொண்டு, அங்கு நடைபெறும் மனித உரிமை மீறல்கள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.