ஆளுநர் மாளிகை மீட்டிங்! ஆர்என் ரவியுடன் ஆன்லைன் கேமிங் நிறுவனம் சந்திப்பு? நெல்லை முபாரக் கண்டனம்
சென்னை : தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பதா? எனவும், தமிழக ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் கேமிங் நிறுவனத்தின் பிரதிநிதிகள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சென்னை ஆளுநர் மாளிகையில் ஆளுநரை சந்தித்ததாக தகவல் வெளியாகியிருக்கிறது.
இ-கேமிங் ஃபெடரேஷனின் பொதுக் கொள்கை இயக்குநர் தேவுதி பக்ஷி, ஜங்கிலி கேம்ஸ் சஞ்சீவ் சாடி, கேம்ஸ் 24x7 இணை இயக்குநர் அக்ஷய் குப்தா, கேம்ஸ் 24x7 தலைமை சட்ட அதிகாரி சமீர் சுக் ஆகியோர் தான் ஆளுநரை 5ஆம் தேதியே சந்தித்தாகக் கூறப்படுகிறது.
தமிழக ஆளுநர் ரவி குறித்து விவாதிக்க வேண்டும்! மக்களவையில் நோட்டீஸ் கொடுத்த மாணிக்கம் தாகூர் எம்.பி.!
ஆன்லைன் சூதாட்ட தடை
இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பதா? எனவும், தமிழக ஆளுநரின் நடவடிக்கை கண்டிக்கத்தக்கது! என எஸ்.டி.பி.ஐ. மாநில தலைவர் நெல்லை முபாரக் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்," தமிழகத்தில் லாட்டரி சீட்டைப் போன்று ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்ட விளையாட்டால் ஏராளமான குடும்பங்கள் சீரழிவை சந்தித்து வருகின்றன. அப்பாவி மக்களின் பொருளாதாரத்தையும், உயிர்களையும் பறிக்கும் ஆன்லைன் ரம்மி போன்ற சூதாட்டங்களுக்கு எதிராக வலுவான சட்டம் இயற்ற வேண்டும் என்று தொடர் கோரிக்கைகள் தமிழக அரசுக்கு முன்வைக்கப்பட்டது.
கண்டனம்
இந்நிலையில், தமிழக அரசு நீதியரசர் சந்துரு குழு அளித்த அறிக்கை மற்றும் பரிந்துரையின் அடிப்படையில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடைவிதிக்கும் அவசர சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தது. ஆனால், தமிழக அரசின் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி. இழுத்தடித்து வருகின்றார். இந்நிலையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஆன்லைன் விளையாட்டு நிறுவன நிர்வாகிகளைச் சந்தித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில இணைய ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஆளுநரை சந்தித்த பிரதிநிதிகள், இந்த சந்திப்பு ரகசியமானது என்றும் ஆளுநருடனான இந்த சந்திப்பு மசோதா தொடர்புடையதாகத் தான் இருந்தது என்றும் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கண்டிக்கத்தக்கது
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசால் குடிமக்களின் நன்மை கருதி கொண்டுவரப்பட்ட ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை மசோதாவை கிடப்பில் போட்டுவிட்டு, தடை செய்யப்பட்ட விளையாட்டு நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசித்த தமிழக ஆளுநரின் மக்களாட்சிக்கு விரோதமான இந்த நடவடிக்கை கண்டிக்கத்தக்கது. அரசமைப்புச் சட்டத்தின் தலைவராக இருக்கக்கூடிய ஆளுநர் இவ்வாறு தடை செய்யப்பட்ட சூதாட்ட நிறுவனங்களின் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசிப்பது என்பது சட்ட விரோதமானது. ஆளுநரின் இந்த நடவடிக்கை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு அரசின் செயல்பாட்டை தடுக்கும் நோக்கம் கொண்டதாக உள்ளது.
வலுவாக குரல்
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் மக்கள் நலன் சார்ந்த, மாநில நலன் சார்ந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் இழுத்தடிக்கும் போக்கு என்பது ஏதேச்சதிகாரமானது. இதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. இதற்கு எதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் குரல் கொடுக்க வேண்டும். நாடாளுமன்றத்திலும் வலுவாக குரல் எழுப்ப வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.மேலும், தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசின் மக்கள் நலன் முடிவை, மாநில ஆளுநரை சந்தித்து மாற்றிவிடலாம் என்கிற போக்கு என்பது ஆபத்தானது.
முற்றுப்புள்ளி
ஜனநாயக விரோதமானது. ஆகவே ஆளுநரை சந்தித்த தடைசெய்யப்பட்ட ஆன்லைன் சூதாட்ட நிறுவன நிர்வாகிகள் மீது தமிழக அரசு வழக்குப் பதிவு செய்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். மக்களின் உயிர் மற்றும் பொருளாதார தொடர்புடைய ஆன்லைன் சூதாட்ட விளையாட்டு தடை சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் ஒப்புதல் அளித்து தொடரும் மரணங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திட வேண்டும் எனவும் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.