Exclusive: SDPI கட்சி யாருடன் கூட்டணி..? எங்கெல்லாம் செல்வாக்கு..? மனம் திறக்கும் நெல்லை முபாரக்..!
சென்னை: வரும் தேர்தலில் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் சாதகமான முடிவை எஸ்.டி.பி.ஐ. எடுக்கும் என அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் 200 தொகுதிகளில் கட்சியின் கட்டமைப்பு கிளை வரை உள்ளதாக கூறிய அவர் 100 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்க கூடிய சக்தியாக திகழ்வதாகவும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக ஒன் இந்தியா தமிழுக்கு எஸ்.டி.பி.ஐ. மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அளித்த பேட்டியின் விவரம் பின்வருமாறு;
கேள்வி: SDPI கட்சி சட்டமன்றத் தேர்தலை சந்திக்க தயாராகிவிட்டதா?
பதில்: வரும் 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலை சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம். கடந்த தேர்தலில் 32 தொகுதிகளில் தனித்து போட்டியிட்டோம். அப்போது நாங்கள் பெற்ற வாக்குகள் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியது என்று கூட சொல்லலாம். அந்தளவுக்கு போட்டியிட்ட தொகுதிகள் அனைத்திலும் பலமான ஓட்டுகளை பெற்றிருந்தோம். இந்த முறை தமிழகத்தில் எங்கள் கணக்கை நிச்சயம் தொடங்குவோம். 200 தொகுதிகளில் SDPI கட்சிக்கு கட்டமைப்பு உள்ளது. அதில் 100 தொகுதிகளுக்கு குறையாமல் மிக வலிமையாக செயல்பட்டு வருகிறோம்.
கேள்வி: மற்ற இஸ்லாமிய கட்சிகளுக்கும் எஸ்.டி.பி.ஐ.க்கும் உள்ள வேறுபாடு என்ன..?
பதில்: எஸ்.டி.பி.ஐ. கட்சி இஸ்லாமியர்களுக்கான கட்சி மட்டுமல்ல. அனைத்து சமுதாய பிரதிநிதிகளும் உள்ளடங்கிய கட்சி இது. பயத்தில் இருந்து விடுதலை, பசியில் இருந்து விடுதலை என்பது எங்கள் கொள்கை முழக்கம். அதனடிப்படையில் ஒடுக்கப்பட்டோருக்காக, மண்ணின் உரிமைகளுக்காக, சிறுபான்மையினர் நலனுக்காக, பாதிக்கப்பட்டோரின் குரலாக, தொடர்ந்து ஒலித்துக் கொண்டிருக்கிறோம். இன்னும் சொல்லப்போனால் திராவிட இயக்கம் ஆரம்ப காலத்தில் சமூக நீதிக்காக முழு வீரியத்துடன் எப்படி செயல்பட்டதோ அதன் நீட்சியாக இன்று நாங்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம். மண்ணை பாதிக்கும் எந்த ஒரு விவகாரமாக இருந்தாலும் அதற்கு முதல் எதிர்ப்பு குரல் எங்களிடம் இருந்து தான் வரும்.
கேள்வி: பீகாரில் இஸ்லாமியர்கள் ஓட்டுகளை ஒவைசி பிரித்துவிட்டார், இது பாஜகவுக்கு மறைமுக உதவி என விமர்சிக்கப்படுகிறதே?
பதில்: இது முற்றிலும் தவறு. காங்கிரஸ் பலவீனமாக இருப்பதை மறைப்பதற்கு இப்படி ஒரு குற்றச்சாட்டு முன் வைக்கப்படுகிறது. இஸ்லாமியர்கள் அரசியலில் பங்கெடுக்கவே கூடாதா, அப்படி பங்கெடுத்து வெற்றிபெற்றால் இப்படிக் கூறுவதா. இஸ்லாமியர்கள் ஓட்டுகளை மையமாக வைத்து கூறப்படும் இந்தப் புகாரை ஏற்க இயலாது.
கேள்வி: தமிழகத்தில் எஸ்.டி.பி.ஐ. கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடுமா..?
பதில்: பாஜக வீழ்த்தப்பட வேண்டும் என்பதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அதிமுகவும் பாஜகவும் இப்போது தான் கூட்டணி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். அதேபோல் இன்னும் பல அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் நிகழலாம். நிச்சயம் தமிழகத்தின் முன்னேற்றத்துக்கும், வளர்ச்சிக்கும் சாதகமான முடிவை எஸ்.டி.பி.ஐ.கட்சி எடுக்கும்.
கேள்வி: திமுகவுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி கரம் கோர்க்கக் கூடும் எனக் கூறப்படுகிறதே..?
பதில்: முன்பே கூறியது போல், கூட்டணி பற்றி இப்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. எங்கள் கட்சியின் மாநில பொதுக்குழு கூடி தேர்தல் கூட்டணி பற்றி முடிவெடுப்போம். அது தமிழகத்தின் நலனை கருத்தில் கொண்டதாக இருக்கும். மற்றபடி ஜனவரியில் இதற்கு பதில் கிடைக்கும்.