EXCLUSIVE: எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. அமைச்சர்கள் கேட்கவே இல்லை.. விலகிட்டேன்.. செ.கு. தமிழரசன்
மாற்று அரசியலை கமல் முன்வைக்கிறார் என்று செ.கு தமிழரசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
சென்னை: "அம்மா கொண்டு வந்த திட்டம் எதையும் தமிழக அமைச்சர்கள் செயல்படுத்தவில்லை.. எவ்வளவோ சொல்லி பார்த்தேன்.. கேட்கவில்லை.. அதனால் விலக ஆரம்பித்துவிட்டேன்" என்று இந்திய குடியரசு கட்சி தலைவர் செ.கு.தமிழரசன் தெரிவித்துள்ளார்
இந்திய குடியரசு கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன். மிகச்சிறந்த அரசியல்வாதி. 80'களின் இறுதியில் இருந்து இவரது அரசியல் பயணம் துவங்கியது. மறைந்த ஜெயலலிதா மீது அளவுகடந்த மரியாதை வைத்திருந்தவர். அதேபோல, ஜெயலலிதாவும் இவர் மீது தனிப்பட்ட முறையில் பாசமும், நம்பிக்கையும் வைத்திருந்தவர்.
அதனால்தான் தற்காலிக சபாநாயகராக தமிழரசனை உயர்த்தி அழகு பார்த்தார் ஜெயலலிதா. எப்போது தேர்தல் நடந்தாலும் சரி, செ.குதமிழரசனுக்கு என்று ஒரு தொகுதி ஒதுக்கிவிடுவது ஜெயலலிதாவின் வழக்கம். இந்த வழக்கம் அவர் மறையும்வரை மாறவேயில்லை. அவர் மறைந்தவுடன், கட்சி துண்டாடப்பட்டவுடன், செ.கு. தமிழரசனுக்கு அதிமுக மீதான ஈர்ப்பு குறைந்தது.
[உங்க எம்பியோட சொத்து விவரம் தெரியுமா.. அடேங்கப்பா தகவல்கள்]
இந்நிலையில் திடீரென மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசனுடன் கூட்டணி வைத்துள்ளார். சட்டமன்ற இடைத் தேர்தலில் 3 தொகுதிகளிலும் மக்கள் நீதி மய்யத்தின் 'டார்ச் லைட்' சின்னத்தில் போட்டியிட போவதாகவும் அறிவித்துள்ளார். இதையடுத்து "ஒன் இந்தியா தமிழ்" சார்பாக செ.கு.தமிழரசனுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டு, இந்த திடீர் அறிவிப்பு குறித்து பேசினோம்.
கேள்வி: கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கு மேலாக அதிமுக மீது உங்களுக்கு பிடிப்பு இருந்தது... ஆனால் இப்போது என்ன ஆயிற்று? அதிமுக மேல் உங்களுக்கு என்ன அதிருப்தி?
அம்மா மறைந்தவுடன், அதிமுகவின் எண்ணமும், பிளவுபடுத்தப்பட்டவர்களின் எண்ணமும் அதிகாரத்தை தக்கவைத்து கொள்வது, கட்சியை எப்படி கைப்பற்றி கொள்வது என்பதுதான் இவர்களுக்கு நோக்கமாக இருந்ததே தவிர, அம்மா விட்டு சென்ற பணிகளை தொடர்வது, அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றுவது என்பதை பற்றி செயல்திட்டங்கள் எல்லாமே மெல்ல மெல்ல இல்லாமல் போனது. இதுதான் முதல் காரணம்.
கேள்வி: உங்களுக்கு அனைத்து தமிழக அமைச்சர்களுமே நெருக்கம்தானே... அவர்களிடத்தில் இந்த விஷயத்தை மூத்த அரசியல் கட்சி தலைவர் என்ற முறையில் நீங்கள் சுட்டிக்காட்டியிருக்கலாமே?
பலமுறை அமைச்சர்களையும் பார்க்கிறபோதெல்லாம் இதை எல்லாம் நான் எடுத்து சொல்லி இருக்கிறேன். ஆனால் அவர்களுக்கு இதில் ஆர்வம் இல்லை. அதனால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் சமயத்தில் இருந்தே நான் அவர்களது உறவை துண்டித்து கொள்ள துவங்கிவிட்டேன்.
கேள்வி: அதிமுகவுடன் வேறு ஏதாவது உங்களுக்கு கோபம் உள்ளதா?
ஆளும் கட்சியாக வந்த ஒரு பிரிவினர் இந்த பதவியையும், ஆட்சியையும் காப்பற்றி கொள்வதற்காக முழுக்க முழுக்க பாஜகவின் துணை அமைப்பாகவே மாறிவிட்டார்கள். அம்மா காலத்தில் அறிவிக்கப்பட்ட , செயல்படுத்தப்பட்ட பல நலிந்த மக்களுக்கான செயல்திட்டங்கள் அப்படியே முடக்கப்பட்டுவிட்டது. எல்லாமே செயலற்றுபோய்விட்டது ஆனால் நான் எதிர்பார்த்ததை போலவே அதிமுக-பாஜக கூட்டணியில் சேர்ந்து ஒரு சார்பு அமைப்பாக தமிழகத்தில் அதிகாரப்பூர்வமாகவே ஆகிவிட்டது. இதுவும் ஒரு காரணம்.
கேள்வி: இப்போதுள்ள சூழ்நிலையில் நீங்கள் தேர்தலை சந்திக்க முடிவு செய்ய காரணம் என்ன?
அம்பேத்கரின் கொள்கைகளை வலியுறுத்தி கொண்டிருக்கிற ஒரு தாய் அமைப்பான இந்திய குடியரசு கட்சி, தன் கொள்கையை இழக்காமல், அதே நேரத்தில் ஒடுக்கப்பட்டவர்களுக்கு எதிரானவற்றை ஆதரிக்காமல் ,எங்களுடைய கோரிக்கையை பிரதிபலிக்கிற, எங்களுடைய கோரிக்கையை வலியுறுத்துகிற, அதற்காக குரல் கொடுக்கிற நிலையில்தான் இப்போது தேர்தலை சந்திக்க வந்துள்ளேன்.
கேள்வி: ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழக தேர்தல் களங்களை சந்தித்து வந்துள்ளீர்கள்? இப்போதுள்ள தேர்தல் முறை என்பது எப்படி இருக்கிறது?
இப்போது இருக்கிற தேர்தல் என்பது கார்பரேட் அமைப்புகளுக்கான தேர்தல் ஆகிவிட்டது. நாடாளுமன்ற தேர்தல் என்றால், ஒரு வேட்பாளரின் செலவு 70 லட்சம் ரூபாய் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. சட்டப்பேரவைக்கு 24 லட்சம் என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது. ஆனால் இந்த நாட்டில் இத்தனை கோடி மக்கள் இருக்கிறோம், ஒருநாளைக்கு 200 ரூபாயை கூட சம்பாதிக்க முடியாமல் இருக்கிறார்கள் என்பதை அரசியல் கட்சிகள் மறந்துவிடுகின்றன. அதனால் இந்ததேர்தல் அமைப்பு என்பது முதலாளித்துவத்துக்கு கார்ப்பரேட்டுகளுக்கு, பன்னாட்டு நிறுவனங்களுக்கு, தேசிய நிறுவனங்களுக்கு என இவர்களின் கை ஓங்குகிற, இவர்களின் சக்தி ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் மட்டுமே களமிறங்க முடியும் என்ற சூழலை தேர்தல் ஆணையமும், தேசிய கட்சிகளும், அரசியல் கட்சிகளும் உருவாக்கி வைத்துவிட்டன. இந்த நிலையில் ஏழை எளிய மக்களுக்காக கட்சி நடத்துகிறவர்கள் இந்த தேர்தலில் எப்படி பங்கெடுப்பார்கள்? எப்படி களம் காணுவார்கள்? இதை நாங்கள் உணர்ந்திருந்தாலும் உலகத்திலேயே தனிமனித ஜனநாயகத்துக்கு முக்கியத்துவம் தரும் இந்திய ஜனநாயகத்தில் எங்கள் குரல் தமிழக நலிந்த மக்களுக்காக ஒலிக்கும் என நம்புகிறோம்.
சசிகலாவின் திட்டம் விவேக்.. தினகரன் மனதில் அனுராதா.. தேனியில் நிற்கப் போவது யார்?
கேள்வி: சரி.. கமல்ஹாசனை சந்தித்து கூட்டணி வைத்துள்ளீர்கள். இதற்கு என்ன காரணம்?
கமல் ஒரு மாற்று அரசியலை முன்வைக்கிறார். மக்கள் செல்வாக்குள்ள நபராக அவர் இருந்தாலும் மாற்று அரசியலை கையில் எடுத்துள்ளார். இந்த மாற்று அரசியல்தான் இன்றைக்கு தமிழகத்தில் தேவைப்படுகிற ஒன்று ஆகும். ஒரு விழிப்புணர்ச்சியை உருவாக்க கூடிய ஒன்று ஆகும். இது என்னை வெகுவாக ஈர்த்தது. அவரது இந்த அரசியல் பாதை மக்களிடையே ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கறது. அதனால் மக்கள் நீதிமய்யத்தோடு தோழமை கொண்டு எங்களுக்கு வாய்ப்புள்ள இடங்களில் போட்டியிடுவதற்கான அரசியல் சூழல் கூட்டணியை உருவாக்கி இருக்கிறோம்.
கேள்வி: நடிகர் கமல்.. அரசியல்வாதி கமல்.. இந்த இரண்டையும் நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
ஏற்கனவே அவர் புகழ்பெற்ற திரைப்பட கலைஞராக இருந்தாலும், பல களங்களிலேயே நிறைய விவரங்களை தெரிந்தவர். ஒரு அறிவு ஜீவியாக தன்னை பல தருணங்களில் வெளிப்படுத்தியவர். அதை புலப்படுத்தி இருக்கிறார். அவருக்கு அரசியல் கள விவாதங்கள், அனுபவங்கள் புதிதாக இருந்தாலும், மக்களுக்கான தேடலில் அவர் ஏற்கனவே இருந்தவர்தான்!
கேள்வி: பிரச்சாரம் எப்போதிருந்து தொடங்க போகிறீர்கள்?
வரும் 28-க்கு வேட்புமனு தாக்கல் இன்ன பிற விஷயங்கள் முடிந்தவுடன் பிரச்சாரம் ஆரம்பித்து விடுவதுதான்! நிச்சயம் எங்களது புதிய கூட்டணியை மக்கள் வரவேற்பார்கள் என்று நம்புகிறோம்" என்றார்.