தமிழகத்தில் முதல் நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி.. 2வது நாளாக இன்றும் பணிகள் தொடர்கிறது
சென்னை: தமிழகத்தில் இரண்டாவது நாளாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி இன்று காலை 10 மணிக்கு தொடங்குகிறது. முதல் நாளான நேற்று 2945 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் மொத்தம் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 166000 பேருக்கு நேற்று தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள் உள்பட சுகாதார போரில் முன்கள வீரர்கள்ளுக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் தொடங்கியது. கோவேக்சி, கோவீசீல்டு ஆகிய தடுப்பு மருந்துகள் போடப்படுகின்றன.
தமிழகத்தில் முதல் நாளான நேற்று 2945 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தமிழகத்தில் 166 மையங்களில் தலா 100 பேர் வீதம் 16 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முதல் நாளில் தடுப்பூசிக்காக முன்பதிவு செய்த முன்களப் பணியாளர்களுக்கே தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் மிகக் குறைந்த சதவீத அளவிலான மக்களே தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன் வந்தார்கள்.
சென்னையில் ராஜீவ்காந்தி, ஓமந்தூரார், ஸ்டான்லி, கீழ்பாக்கம் ஆகிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் 50 முதல் 60 சதவீதம் பேர் மட்டுமே தடுப்பூசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. சென்னை மட்டுமின்றி தமிழகத்தின் மற்ற மாவட்ட அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள பலரும் தயக்கம் காட்டினர்.. பின்விளைவுகள் ஏற்படுமோ என்ற அச்சத்தால் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மையங்களுக்கு வரவில்லை என சொல்லப்படுகிறது.
நாடு முழுவதும் 1,91,181 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது - மத்திய சுகாதாரத்துறை
தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை தடுப்பூசி போடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் 5.36 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் நேற்று ஒரு நாளில் 2945 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் வரும் நாட்களில் அதிகம் பேருக்கு தடுப்பூசி போடப்படும் என்றும் சுகாதாதாரத்துறையினர் தெரிவித்தனர்.