தோண்ட தோண்ட பணம்.. வெளிநாடுகளில் சொத்து.. பக்தர்கள் நன்கொடை சூறை.. சிக்கலில் கல்கி சாமியார் மகன்!
கல்கி ஆசிரமத்தில் 2-வது நாளாக ரெயிடு நடந்து வருகிறது
Recommended Video
சென்னை: கல்கி பகவானின் மகன் கிருஷ்ணன் அதிகாரிகளின் விசாரணை பிடியில் வசமாக சிக்கி உள்ளார். கல்கி ஆசிரமத்தில் ரூ. 33 கோடி பறிமுதல் நேற்று செய்யப்பட்ட நிலையில், 2 வது நாளாக இன்றும் வருமான வரி சோதனை ஆசிரம நிறுவனங்களில் தொடர்ந்து நடந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலம் நெகமத்தில் 30 வருடங்களுக்கு மேலாக கல்கி பகவான் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. விஜயகுமார்தான் இந்த ஆசிரமத்தை நடத்தி வருகிறார். இவர் ஆரம்பத்தில் எல்ஐஏசி ஏஜெண்டாக இருந்தவர். இதற்கு பிறகுதான் சாமியாராக மாறி, கல்வி நிறுவனத்தை ஆரம்பித்தார். தன் பெயரையும் கல்கி பகவான் என்றும் சூட்டிக் கொண்டார்.
இந்த ஆசிரமத்தில், கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் உள்ளனர். எத்தனையோ பேர் இந்த ஆசிரமத்திலேயே தொடர்ந்து தங்கியும் உள்ளனர். 7, 8 வருடத்துக்கு முன்பு இந்த ஆசிரமம் மீது செக்ஸ் புகார்கள் கிளம்பியது. அது சம்பந்தமான வீடியோக்கள் கூட வெளியே வந்து விசாரணையும் நடந்தது. அந்த பரபரப்பு ஓய்ந்த நிலையில் மீண்டும் கல்கி ஆசிரமத்தில் இன்று திடீர் ரெய்டு துவங்கியது.
தமிழ்நாடு மற்றும் ஆந்திரா மாநிலக் கிளைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையை நடத்தினர். ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் வரதபாளையத்தில் உள்ள கல்கி ஆசிரமத்தில் நேற்று காலை முதலே அதிகாரிகள் ரவுண்டு கட்டி சோதனையை நடத்தினர்.
சாமியாருக்கு கொஞ்ச நாளாக உடம்பு சரியில்லாத காரணத்தினால் , அவரது குடும்பத்தினர்தான் இந்த ஆசிரமத்தை நிர்வகித்து வருவதாக கூறப்படுகிறது. குறிப்பாக சாமியார் மகன் கிருஷ்ணாதான் எல்லா ஆசிரம பொறுப்பையும், கவனித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இந்த ஆசிரமத்துக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த பக்தர்கள் அதிக அளவில் நிதி வழங்குவதாக கூறப்படுகிறது. அதனால் கிருஷ்ணா, வரி ஏய்ப்பு செய்ததாகவும், பணப்பரிவர்த்தனைகளை மறைத்ததாகவும் புகார் வெளிவந்தது.
அது மட்டும் இல்லை.. பக்தர்கள் நன்கொடை மூலம் திரட்டப்பட்ட பணத்தை வைத்து ரியல்எஸ்டேட் தொழில் செய்து வந்துள்ளனர். இதற்கும் கிருஷ்ணன்தான் முழு பொறுப்பு. வேலூரில் 1000 ஏக்கர் நிலம் இவர்களுக்கு இருக்கிறதாம். இதைதவிர, ஆப்பிரிக்க நாடுகளில் பல சொத்துக்கள் இருக்கிறதாம்.
இந்த புகாரின் பேரிலேயே தமிழ்நாடு, ஆந்திரா, கர்நடாகா என 40 இடங்களில் சோதனை நேற்று நடந்தது. சென்னை ஆயிரம் விளக்கில் உள்ள கிருஷ்ணாவின் ஆபீசிலும் சோதனை நடந்தது. இந்த சோதனை நேற்று மாலை முடிந்தநிலையில், 24 கோடி இந்தியப் பணத்தினை அதிகாரிகள் பறிமுதல் செய்ததாக கூறப்பட்டது.
மேலும் 9 கோடி அமெரிக்க டாலரும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதற்கு முறையான எந்த ஆவணங்களும் இல்லை என தெரிகிறது. இதைதவிர வெளிநாட்டுப் பணமும் சிக்கியுள்ளது. இதனால் அதிகாரிகள் இன்று 2-வது நாளாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். அமலாக்கப் பிரிவு சோதனையும் நடைபெறவுள்ளது. கல்கி மருமகள், மேலாளரிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.