யார்க்கர் போட்ட காங்கிரஸுக்கு.. ஷாக்கர் கொடுக்கத் தயாராகும் திமுக.. மாநகராட்சி தேர்தலில் கல்தா?
சென்னை: மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுக்கான தேர்தலை விரைவில் தமிழக அரசு அறிவிக்க உள்ளது. இத்தேர்தலில் கூட்டணியில் இருந்து காங்கிரஸை திமுக கழற்றிவிடும் என தெரிகிறது.
ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுக அமோக வெற்றி பெற்றது அதிமுகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இருப்பினும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் தேர்தலில் அதிமுக அதிக இடங்களை கைப்பற்றியது.
இதே வேகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தல்களையும் அறிவிக்க அதிமுக தயாராகி வருகிறது. இது தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சக அமைச்சர்களுடன் தீவிர ஆலோசனை நடத்தி வருகிறார்.
450 அடி உயரத்தில் அம்பேத்கருக்கு வெண்கல சிலை... மஹாராஷ்டிரா மாநில அரசு முடிவு
2-ம் கட்ட தேர்தல்
அடுத்த 10 நாட்களில் இத்தேர்தல்களுக்கான அறிவிப்பு வெளியாகக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல்களும் சேர்த்து நடத்தப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
அதிருப்தியில் திமுக
இதனிடையே ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவை வெளிப்படையாக காங்கிரஸ் விமர்சித்திருப்பது அக்கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. திமுகவை பொறுத்தவரையில் காங்கிரஸை வேண்டா வெறுப்பாக ஒரு சுமையாகவே கருதுகிறது திமுக.
திமுக புறக்கணிப்பு
தற்போது திமுகவை விமர்சித்து தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி வெளியிட்டது அக்கட்சியினரை கொந்தளிக்க வைத்துள்ளது. இதனை வெளிப்படுத்தும் விதமாகவே டெல்லியில் காங்கிரஸ் கூட்டிய அனைத்து கட்சி ஆலோசனை கூட்டத்தை திமுக புறக்கணித்தது.
டி.ஆர். பாலு விளக்கம்
டெல்லியில் திமுக மூத்த தலைவர் டி.ஆர்.பாலு இருந்த போதும் அக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. கே.எஸ். அழகிரியின் அறிக்கைதான் இந்த புறக்கணிப்புக்குக் காரணம் என டி.ஆர்.பாலுவும் வெளிப்படையாக தெரிவித்திருந்தார்.
அழகிரி சமாதானம்
இதனையடுத்து டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தியை கே.எஸ். அழகிரி நேரில் சந்தித்து பேசினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ். அழகிரி, திமுகவும் காங்கிரஸும் இணைந்த கரங்கள் என கூறியிருந்தார்.
காங்கிரஸுக்கு திமுக குட்பை?
ஆனாலும் காங்கிரஸ் மீதான திமுகவின் கோபம் குறையவில்லை என்றே கூறப்படுகிறது. இதனால் 2-ம் கட்ட உள்ளாட்சித் தேர்தல்களில் காங்கிரஸை திமுக கழற்றிவிடவே வாய்ப்புகள் அதிகம் என்கின்றன அரசியல் வட்டாரங்கள்.