லோக்சபா தேர்தல்.. பரம ரகசியமாக கூட்டணி பேச்சுவார்த்தை… போட்டுடைத்த ஓபிஎஸ்
Recommended Video
சென்னை:லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பரம ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பிப்ரவரி மாதம் பிறந்து விட்ட நிலையில் தமிழகத்தில் லோக்சபா தேர்தல் பணிகள் களைகட்ட தொடங்கிவிட்டன. தேசிய கட்சிகளில் ஒன்றாக காங்கிரசில் அதிரடி திருப்பமாக திருநாவுக்கரசர் தூக்கியடிக்கப்பட... அரசியல் திருப்பங்கள் அரங்கேறி வருகின்றன.
இதன் மூலம், திமுக, காங்கிரஸ் அடுத்த கட்ட நகர்வை நோக்கிச் செல்ல தொடங்கி உள்ளன. அதிமுகவின் நிலையோ என்ன என்று தெரியாமல் கட்சி தொண்டர்கள்.. ஆளுக்கு ஒரு கருத்தை தங்களுக்குள் பேசி வருகின்றனர். ஆக மொத்தம் அதிமுக நிச்சயமாக கூட்டணி வைத்து தான் தேர்தலை சந்திக்கும் என்பது அவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை.
பாஜகவுடன், அதிமுக கூட்டணி?
தமிழகத்தில் பாஜக மற்றும் அதிமுக இடையிலான கூட்டணி முடிவாகி விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், லோக்சபா தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து பரம ரகசிய பேச்சுவார்த்தை நடைபெறுகிறது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறி... அரசியல் பரபரப்பை அதிகரிக்க வைத்துள்ளார்.
அண்ணா நினைவு நாள்
சென்னை திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோவிலில் அண்ணா நினைவு தினத்தை முன்னிட்டு பொது விருந்து நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, பொதுமக்களுடன் அமர்ந்து உணவருந்தினார்.
பேட்டியளித்த ஓபிஎஸ்
பின்னர், செய்தியாளர்களுக்கு அவர் பேட்டியளித்தார். அப்போது ஓபிஎஸ் கூறியதாவது:லோக்சபா தேர்தலை முன்னிட்டு விருப்ப மனுக்கள் வழங்கப் படவுள்ளது.
கூட்டணி பரம ரகசியம்
விருப்பமுள்ள கழக தொண்டர்கள் அவற்றை பெற்று கொள்ளலாம். அதிமுக வுடன் தோழமை கட்சி, தேசிய கட்சி, மாநில கட்சி, ஒத்த கருத்துடைய கட்சிகளிடம் கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை பரம ரகசியமாக நடத்தப்படுகிறது.
தம்பிதுரை கருத்து
யாருடன் என்ற முடிச்சு அவிழ்க்கப்பட்டவுடன் தெரியபடுத்தப்படும். பாஜக பற்றி தம்பிதுரையின் கருத்து அவருடைய தனிப்பட்ட கருத்தாகும். தமிழகத்தில் அதிமுக பலம் பொருந்திய கட்சியாக இருப்பதால் கூட்டணிக்காக நாங்கள் யாரையும் தேடி செல்ல போவதில்லை. விருப்பமுள்ளவர்கள்தான் தங்களை தேடி வருவார்கள் என்று கூறினார்.