வைகோவின் பரபரப்பு பேச்சு... ராஜ்யசபா இடைத்தேர்தலை சந்திக்கிறது தமிழகம்?
Recommended Video
சென்னை: தேசதுரோக வழக்கில் தமக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனை உறுதி செய்யப்பட்டால் தாம் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படலாம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராஜ்யசபா இடைத்தேர்தலை தமிழகம் எதிர்கொள்ளுமா? என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.
2009-ம் ஆண்டு திமுக ஆட்சிக் காலத்தில் வைகோ மீது தேசதுரோக வழக்கு போடப்பட்டது. இவ்வழக்கில் வைகோ குற்றவாளி என்றும் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை விதிக்கப்படுவதாகவும் எம்.எல்.ஏக்கள், எம்.பிக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதை எதிர்த்து வைகோ சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இம்மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், வைகோவுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்தி வைத்துள்ளது. இந்நிலையில் ஊபா சட்ட திருத்த மசோதா மீது ராஜ்யசபாவில் வைகோ தமது முதல் உரையை நிகழ்த்தினார்.
அதில் பேசும்போது, சுதந்திர இந்தியாவில் 124-ஏ எனும் தேசதுரோக பிரிவின் கீழ் தண்டிக்கப்பட்ட முதல் குற்றவாளி நான். இந்த வழக்கில் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்துள்ளேன். இன்னும் சில வாரங்களில் வழக்கு விசாரணைக்கு வர இருக்கிறது. எனக்கு விதிக்கப்பட்ட தண்டனை உறுதி செய்யப்பட்டால் எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்படுவேன். நான் மீண்டும் இந்த சபைக்கு வராமல் போய்விடுவேன். எனக்கு அதைப்பற்றி கவலை இல்லை என கூறியிருந்தார்.
வைகோவின் இந்த பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வைகோவுக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர் சிறைக்கு செல்ல நேரிடும் என்பதுடன் எம்.பி. பதவியும் பறிபோகும். அதனால் தமிழகத்தில் 1 ராஜ்யசபா இடத்துக்கான இடைத்தேர்தல் நடைபெறும் சூழ்நிலை உருவாகும்.
அப்போது, திமுக அந்த இடத்தை மீண்டும் மதிமுகவுக்கு கொடுக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில் தமக்காக மட்டுமே திமுக ராஜ்யசபா சீட் கொடுத்தது என வைகோவே தெளிவுபடுத்தியிருக்கிறார். வைகோவின் வேட்புமனுவை ஏற்பதில் சிக்கல் வரலாம் என்பதாலேயே திமுகவின் என்.ஆர். இளங்கோவையும் மனுத்தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அதனால் மீண்டும் மதிமுகவுக்கு ராஜ்யசபா சீட்டை திமுக தராது. திமுகவில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோவுக்கு ராஜ்யசபா சீட் கொடுக்க வாய்ப்பிருக்கிறது என்றே கூறப்படுகிறது.