ஏன் அப்படி பேசினீர்கள்.. கமல்ஹாசனிடம் விளக்கம் கேட்கிறது தேர்தல் ஆணையம்
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசனின் சர்ச்சை பேச்சு குறித்து கரூர் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளதாக மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.
அரவக்குறிச்சி சட்டசபை இடைத் தேர்தலையொட்டி, தேர்தல் பிரச்சாரத்தின்போது பேசிய கமல்ஹாசன், சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி நாதுராம் கோட்சே என்றும், அவர் ஒரு இந்து என்றும் தெரிவித்தார்.
கமல்ஹாசன் கருத்துக்கு நாடு முழுக்க பாஜக மற்றும் வலதுசாரி அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் கமல்ஹாசனா? கே.எஸ் அழகிரி பகீர் பதில்!
இந்த நிலையில், சென்னையில் இன்று நிருபர்களை சந்தித்தார் சத்யபிரதா சாஹூ. அப்போது அவர் கூறியதாவது: 4 தொகுதி இடைத்தேர்தல், மறுவாக்குப்பதிவு ஆகிய தேர்தல் பணிகளில் 5,508 ஊழியர்கள் ஈடுபட உள்ளனர். பாதுகாப்பு பணியில் 1300 சிஆர்பிஎப் வீரர்கள் மற்றும் 15,939 காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி தொகுதியில், பள்ளப்பட்டி பகுதியில், கமல்ஹாசன் பேசிய சர்ச்சை பேச்சு குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அறிக்கை வந்த பிறகு தேவைப்படும் நடவடிக்கை எடுக்கப்படும். குச்சனூர் கோவிலில், ரவீந்திரநாத்தை எம்.பி. என குறிப்பிட்டு கல்வெட்டு வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சத்யபிரதா சாஹு தெரிவித்தார்.