கையெடுத்து கும்பிட்ட சீமான்- அய்யா சாமீகளா! கிறிஸ்தவர், முஸ்லிம்களை தாய்மதம் திரும்ப சொல்லவே இல்லை!
சென்னை: தாம் கிறிஸ்தவர்கள், முஸ்லிம்களை தாய் மதம் திரும்ப சொல்லவே இல்லை.. மீண்டும் மீண்டும் திரித்து பேசிக் கொண்டிருக்கின்றனர் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விளக்கம் அளித்துள்ளார்.
இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தின் சீமான் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: செய்தியாளர்களிடம் நான் பேசிய போது தாய்மதம் என்ற சொல்லை எங்கேயாவது பயன்படுத்தி இருக்கிறேனா? இஸ்லாம், கிறிஸ்தவம் எங்களுடைய சமயங்கள் அல்ல. சிவனியம், சைவம், மாலியம்தான் எங்கள் சமயம்.
நாங்கள் இந்துக்கள் இல்லை. ஆரியத்தின் அடிமைகளாக இருக்க கூடாது என்று பெரியாரும் அண்ணாவும் பேசியதைத்தான் நானும் பேசுகிறேன். இந்துக்கள் அனைவரும் தமிழர் என்றால் குஜராத்திலும் உ.பி.யிலும் பீகாரிலும் இருக்கிற இந்துக்கள் தமிழர்களா? எச்.ராஜா தமிழரா? இந்துக்களே இல்லை என்கிற பெ.மணியரசன் போன்றவர்கள் தமிழ் இந்துக்கள் என கூறுவதை ஏற்க இயலாது.
வட இந்தியாவில் நாயன்மார்கள் உண்டா?
நாயமன்மார்களும் ஆழ்வார்களும் தமிழில்தான் பாசுரங்களைப் பாடினார்கள். இந்துக்கள் என சொல்கிற வட இந்தியாவில் நாயன்மார்கள் உண்டா? ஆழ்வார்கள் உண்டா? பாசுரங்கள் உண்டா? அப்புறம் எப்படி நாங்கள் இந்துக்களாக இருக்க முடியும்? அதனால்தான் ஆரிய மார்க்கமான பிராமண மார்க்கமான இந்து மதத்தை கைவிட்டுவிட்டு சைவம், வைணவத்துக்கு திரும்பி வாருங்க என்றேன். இதில் கிறிஸ்தவர்கள், இஸ்லாமியர்கள் எங்கே வருவார்கள்? அவர்களை நான் ஏன் தாய்மதம் திரும்ப சொல்லனும்? இறை அச்சம் கொஞ்சமாவது இருந்தா அப்படி பொய் பேசுவீங்களா?
மதம் மாற சொல்லலை
நான் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் மதம் மாறி வாங்க என அழைக்கவே இல்லை.. மதம் மாறுவதும் மாறாமல் போவதும் உங்கள் விருப்பம். ஆனால் நான் இந்து அல்ல.. நாங்கள் இந்துக்கள் அல்ல. நான் என்ன மதம் பரப்ப வந்த ஜியு போப், கால்டுவெல்லா? எனக்கு இதுதான் வேலையா? உங்களை மதம் மாற்றி மந்திரிச்சு விடுறதுதான் என் வேலையா? என் வேலை வேறு. இயக்குநர் அமீர் என்னை ஆதரிக்கவில்லை. அவரது பாதை வேறு. எங்கள் பாதை வேறு. இயக்குநர் அமீர் மதமா பார்க்கிறார்.. நான் மொழி, இனமாகப் பார்க்கிறேன்.
Recommended Video
திமுகவுக்கு கேள்வி
கருணாநிதியும் திமுகவும் கிறிஸ்தவ, இஸ்லாமிய மக்களுக்கு செய்த ஒரே ஒரு நன்மை என்ன? ஒரே ஒரு நன்மையை சொல்ல முடியுமா? குஜராத் கலவரத்தில் பல ஆயிரம் மக்களை கொன்று குவித்த போது மோடிக்கு ஆதரவாக திமுகவின் டி.ஆர்.பாலுவும் வைகோவும்தான் பேசினார்கள். குஜராத் கலவரத்தை கருணாநிதி கண்டித்து வெளியிட்ட ஒரு அறிக்கை இருக்கிறதா? நான் இந்துவே இல்லை என்கிற நான் உங்களுக்கு எதிரி.. ஆனால் 90% விழுக்காடு இந்துக்கள் உள்ள கட்சி திமுக என்கிறார் ஸ்டாலின். யார் பாஜகவின் பி டீம்? சி டீம்? சீமானுக்கு ஓட்டுப் போட்டால் மதம் மாற்றிவிடுவார் என்கிற பிரசாரத்தை முன்னெடுக்கின்றனர்.
கும்பிடு போட்ட சீமான்
கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இல்லாத நடைமுறையாக ஆளுநருக்கு தற்போதைய திமுக அரசு அறிக்கை தருவது தவறானதாகவும். தவறான ஒரு முன்னுதாரணத்தை திமுக அரசு உருவாக்குகிறது. பேரறிஞர் அண்ணா, ஆட்டுக்கு தாடி... நாட்டுக்கு ஆளுநர் என பேசியது எல்லாம் எதற்காக? பொதுவாக ஆளுநர் என்பவர் அரசு விழாக்களில் ஒரு ஓரமாக உட்கார்ந்திருந்தார். ஆளுநர் உரை என்றால் எழுதிக் கொடுத்ததை படித்துவிட்டுப் போகக் கூடியவர். தேவை இல்லாத முன்னுதாரணங்கள் தவறானவை. மதம் மாற சொன்னதாக தவறான ஒன்றை பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். அய்யா சாமீகளா! உங்களை நான் மதம் மாற சொல்லவே இல்லை.. நீங்கள் உங்கள் வேலைகளைப் பாருங்கள்.. என இருகையை கூப்பி வேண்டுகோள் விடுத்தார் சீமான்.