வேல் வழிபாட்டில் தமிழர் பண்பாட்டை மீட்போம்... தைப்பூசம் கொண்டாடி சீமான் சூளுரை
சென்னை:தைப்பூசத்தையொட்டி தமது வீட்டில் திருமுருகன் குடில் அமைத்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வேல்வழிபாடு நடத்தினார்.
தைப்பூசநாளில் நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பில், சென்னை, மதுரவாயல் உறவுகள் சார்பாக இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது. தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் குடில் அமைத்து முருகனின் திருவுருவச் சிலையும் வேலும் நிறுவி வழிபாட்டிற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டன.
அதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று தமிழர் மெய்யியல் முறைப்படி உறுதிமொழியேற்று வேல்வழிபாடு செய்தார். பின்னர் அனைவருக்கும் தினைமாவு உருண்டை, சிற்றுண்டி மற்றும் இனிப்புகள் வழங்கினார்.
சீமான் அறிக்கை
அதனை தொடர்ந்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இறைவனே இந்த உலகத்தைப் படைத்தார், அவரே ஆடுவார் என்ற மாயக் கற்பனைக் கதைகளில் சிக்கி அலைவது, அதே மாயக்கதைகளை நமது வருங்கால சந்ததிக்கு சொல்லி வைப்பது அல்ல எங்களுடைய இறையோனின் தேடல்.
வரலாறு கொண்ட தமிழ் இனம்
நீண்ட வரலாற்றை கொண்ட இந்தத் தமிழ் சமுதாயத்திற்கு எல்லாமே இயற்கையாகவே அமைந்துவிட்டது. அறிவு, ஆற்றல், வீரம், அன்பு என எல்லாம் பெற்று கோலோச்சிய தமிழ் இனத்திற்கு தனித்த பெருமையுடைய இறையோனாக முருகன் இருக்கிறார்.
முருகன் குடில்
தமிழர் வாழும் நிலங்களில் எல்லாம், தமிழர் குடும்பங்களில் எல்லாம் முருகனின் பெயர் சுமந்து காணப்படுவது, தமிழர் வாழ்வில் முருகன் இரண்டற கலந்ததற்கான சான்று. அப்படிப்பட்ட தைப்பூச பண்பாட்டு நிகழ்வு மேலும் சிறக்கும் வகையில் வீரத்தமிழர் முன்னணி சார்பில் தமிழகம் முழுவதும் குடில் அமைத்து முருகனே வடிவான வேல் நிறுவி வழிபட இருக்கிறோம்.
வேல்குடில் அமைக்க வேண்டுகோள்
ஆகையால் நாம் தமிழர் கட்சியினர் தாங்கள் வசிக்கும் பகுதியில் தை 5,6, மற்றும் தைப்பூச நாளான தை 7 உள்ளிட்ட 3 நாட்களிலும் குடில் அமைத்து வேல் நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த வேண்டும். மேலும் சிற்றுண்டி வழங்குமாறு நாம் தமிழர் கட்சி, வீரத்தமிழர் முன்னணி, மற்றும் அனைத்து பாசறை அனைத்து நிலை பொறுப்பாளர்களையும் கேட்டுக் கொள்கிறேன்.
வேல்வழிபாட்டு நெறிமுறைகள்
வேல்வழிபாட்டிற்கு என்று வீரத்தமிழர் முன்னணி சார்பில் உருவாக்கப்பட்டு இருக்கும் வேல்வழிபாட்டு நெறிமுறைகளின் படி, தங்களின் ஊர்களில் முருகன் குடில் அமைத்து அதில் வேலினை வழிபட வேண்டுகிறேன். தமிழரின் விடுதலை, தமிழர் பண்பாட்டு விடுதலையில் இருக்கிறது. தமிழர் பண்பாட்டின் விடுதலை என்பது கலப்படமற்ற தமிழர் வழிபாட்டில் இருக்கிறது. அவற்றை வேல்வழிபாட்டின் மூலம் மீட்டெடுப்போம் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.