இவ்வளவு நடந்துச்சே.. அப்பெல்லாம் ஏன் பேசலை ரஜினிகாந்த்?.. லிஸ்ட் போட்டு தாக்கிய சீமான்
Recommended Video
சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நடிகர் ரஜினிகாந்துக்கு கண்டனம் தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு தலைநகர் டெல்லி உள்ளிட்ட இடங்களில் போராட்டம் சூடு பிடித்துள்ளது. இதற்கு தமிழகத்தில் பெரும்பாலான அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து ரஜினிகாந்தின் பதில் பெரும்பாலானோரால் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இன்று ரஜினிகாந்த் சென்னையில் தனது இல்லத்தில் பேட்டி அளித்தார். அவர் கூறுகையில் குடியுரிமை திருத்தச் சட்டத்தால் இந்திய முஸ்லீம்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை.
ரஜினி அப்படி என்ன தப்பா பேசிட்டார்.. கரெக்ட்டா பேசியிருக்கார்.. சப்போர்ட்டுக்கு வந்த எச் ராஜா
கண்டனம்
இந்த சட்டத்தின் படி இந்திய முஸ்லீம்கள் வெளியேற்றப்பட்டால் அவர்களுக்காக தான் முதல் ஆளாக குரல் கொடுப்பேன். சிஏஏ விவகாரத்தில் பீதி கிளப்பப்பட்டு உள்ளது. அரசியல்வாதிகள் தங்கள் சுயலாபத்திற்காக தூண்டி விடுகிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் கூறியிருந்தார். இதற்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.
|
சீமான் ட்விட்டர்
இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியின் சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் ரஜினி காந்திற்கு சரமாரி கேள்விகளை எழுப்பியுள்ளார். அவர் தனது பதிவில் இந்திய இசுலாமியர்களுக்கென்று ஒரு பிரச்சினையென்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்பேன் என்கிறீர்களே..! முன்னாள் குடியரசுத் தலைவர் பக்ருதீன் அலி அகமதுவின் குடும்ப உறுப்பினர்களது குடியுரிமையும், கார்கில் போரில் பங்கேற்ற முன்னாள் இராணுவ வீரர் முகமது சனாவுல்லாவின் குடியுரிமையும் தேசியக் குடிமக்கள் பதிவேட்டால் அஸ்ஸாமில் பறிக்கப்பட்டுள்ளதற்குக் குரல் கொடுத்தீர்களா?
குரல்
ஜெய்ஸ்ரீராம் எனக் கூறக்கோரி 15 வயது இசுலாமிய சிறுவன் உத்திரப்பிரதேசத்தில் காவிப் பயங்கரவாதிகள் எரித்துக் கொன்றதற்குக் குரல் கொடுத்தீர்களா? காஷ்மீரில் ஆசீபா எனும் குழந்தை கோயிலுக்குள் வைத்துக் கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டதற்குக் குரல் கொடுத்தீர்களா? அமீர்கான் போன்ற உச்சபட்ச திரை நட்சத்திரங்களே இசுலாமியர் என்பதால் அச்சுறுத்தலுக்கு உள்ளானபோது குரல் கொடுத்தீர்களா? எதற்குத்தான் குரல் கொடுப்பீர்கள்? எப்போதுதான் வாய் திறப்பீர்கள்? என சீமான் காட்டமாக 5 கேள்விகளை எழுப்பியுள்ளார்.
ரஜினி பதில்
இந்த கேள்விகளுக்கு எல்லாம் ரஜினி காந்த் பதிலளிப்பாரா என்பது சந்தேகம்தான். பெரியார் விவகாரத்திலும் ரஜினி காந்த் உண்மைக்கு புறம்பான கருத்துகளை தெரிவித்ததாக கூறி திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் கட்சி, திராவிடர் கழகம், பெரியார் அமைப்புகள் கண்டனம் தெரிவித்திருந்தன. மேலும் ரஜினி காந்த் சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசாமலும் அது குறித்த கேள்விகளுக்கு விடையளிக்காமல் இருப்பதும் நல்லது என அரசியல் கட்சியினர் தெரிவித்திருந்தனர்.