சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காணாமல் போன 20,000 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டனர்...கோத்தபாயவின் அறிவிப்புக்கு சீமான் கண்டனம்

Google Oneindia Tamil News

சென்னை: ஈழப் போரில் 20,000 தமிழர் இனப்படுகொலை செய்யப்பட்டுவிட்டனர் என்பதற்கான ஒப்புதல் வாக்குமூலமே இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேவின், காணாமல் போனோர் இறந்துவிட்டனர் என்கிற அறிவிப்பு என கண்டனம் தெரிவித்துள்ளார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள அறிக்கை:

இறுதிக்கட்ட ஈழப்போரில் காணாமல் போனவர்கள் இறந்து போய்விட்டார்கள் என இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்திருப்பது பேரதிர்ச்சியைத் தருகிறது. இது உலகம் முழுக்கப் பரவி வாழும் தமிழர்களிடையே பெரும் உள்ளக்கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

ஒப்புக் கொண்டது இலங்கை

ஒப்புக் கொண்டது இலங்கை

கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக இறுதிக்கட்டப்போரில் காணாமல்போன தமிழ் மக்களையும், சரணடைந்த போராளிகளையும் விடுதலை செய்யக்கோரி அவர்களது குடும்பத்தாரும், உறவினர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் போராடி வருகிற சூழலில் இலங்கை அதிபரின் அறிவிப்பு உலகத்தார் உள்ளங்களில் இடியென இறங்கியிருக்கிறது. இறுதிக்கட்டப்போரில் காணாமல் போனவர்களின் நிலை குறித்தறிய ஐ.நா. பெருமன்றம்வரை சென்று ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் போராடி வருகிற நிலையில், இதுகுறித்து வாய்திறக்காது கள்ளமௌனம் சாதித்து வந்த இலங்கை இனவாத அரசு, தற்போது அவர்கள் இறந்துவிட்டதாக அறிவித்திருப்பதன் மூலம் ஈழத்தில் தாங்கள் நடத்திய இனப்படுகொலையை மீண்டுமொருமுறை ஒப்புக்கொண்டிருக்கிறது.

இனப்படுகொலை

இனப்படுகொலை

ஈழ நிலத்தில் 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பெண்கள் கணவனை இழந்து நிற்கிறார்கள். பல்லாயிரக்கணக்கான பெண்கள் பாலியல் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். பெண்கள், முதியவர்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள், செவிலியர்கள், பத்திரிக்கையாளர்கள் என எவ்விதப் பேதமுமில்லாது தமிழர்கள் சிங்கள அரசின் கொத்துக்குண்டுகளால் கொலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். போர் விதிகளும், மரபுகளும் முற்று முழுதாகத் தகர்க்கப்பட்டு, தமிழர்கள் இன அழிப்புக்கு உள்ளாக்கப்பட்டு, இரண்டு இலட்சத்திற்கும் மேலான தமிழர்கள் உயிரிழந்திருக்கிறார்கள். இலங்கையை ஆண்ட சிங்கள இனவெறி அரசின் திட்டமிட்ட இனப்படுகொலையால் ஈழப்பெருநிலம் பெரும் அழிவைச் சந்தித்து உலகெங்கும் அகதியாக அலைகிற இழிநிலைக்குத் தமிழ்த்தேசிய இன மக்கள் தள்ளப்பட்டு நிற்கிறார்கள்.

மக்கள் போராட்டம்

மக்கள் போராட்டம்

கடந்த 2009 மே மாதம் நிகழ்ந்தப் போரின் இறுதிக்கட்டத்தில் 59 குழந்தைகள் உள்ளிட்ட பல நூறு பேர் வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைந்தார்கள். அதற்கு முந்தைய, பிந்தைய காலகட்டங்களில் விசாரணை எனவும், புலிகள் இயக்கத்திற்குத் தொடர்புடையவர்கள் எனவும் பல்லாயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களைச் சிங்கள இனவாத அரசு கைதுசெய்து பிடித்துச்சென்றது. எந்தவிதமான நீதி நெறிமுறைகளும், சனநாயக வழிகளும் பின்பற்றப்படாமல் பிடித்துச் செல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான தமிழின மக்கள் குறித்து எவ்விதத் தகவலும் கிடைக்காத சூழலில் தங்களது சகோதர, சகோதரிகளை இழந்தவர்கள், கணவனை இழந்தவர்கள், மகன்களை, மகள்களை இழந்தவர்கள் எனச் சிங்கள அரசினால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழின இளைஞர்களைப் பறிகொடுத்த உறவுகள் கண்ணீர் மல்க வீதிகளில் இறங்கிப் போராடி வந்தார்கள்.

வன்மையான கண்டனத்துக்குரியது

வன்மையான கண்டனத்துக்குரியது

கடந்த சில வருடத்திற்கு முன்பாக, இலங்கைக்குச் சென்ற இங்கிலாந்து நாட்டு பிரதமர் டேவிட் கேமரூனுக்கு முன்பாகக்கூடத் தமிழின சொந்தங்கள் காணாமல்போன தங்களது உறவுகளின் புகைப்படத்தை ஏந்திக்கொண்டு கதறி அழுத சம்பவங்களும் நடந்தன. இச்சூழலில் அவர்கள் மொத்தமாக இறந்துவிட்டதாக அலட்சியப்போக்கோடு அறிவித்து அதனை மிக எளிதாகக் கடந்து செல்ல முற்படும் இலங்கை அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது. காணாமல் போனவர்கள் இறந்துவிட்டார்கள் என அறிவித்திருக்கும் கோத்தபய ராஜபக்சே, இத்தனை காலம் கழித்துத் தாமதமாகச் சொல்லியிருப்பதன் உள்நோக்க அரசியலை உலகத்தமிழ்ச்சமூகம் கேள்வி எழுப்புகிறது.

சிங்கள அரசு பதில் சொல்ல வேண்டும்

சிங்கள அரசு பதில் சொல்ல வேண்டும்

காணாமல் போன அத்தனையாயிரம் தமிழர்கள் எவ்வாறு இறந்தார்கள்? யாரால் இறந்தார்கள்? அவர்களது உடல்கள் எங்கே?, அவர்களது உடல்கள் உடற்கூராய்வு செய்யப்பட்டதா? என்கிற கேள்விகளுக்குச் சிங்கள அதிபர் பதில் சொல்லியே ஆகவேண்டும். நினைத்தாலே நெஞ்சம் பதறித் துடிக்கக்கூடிய 20 ஆயிரம் தமிழர்களது உயிரிழப்பைத் துச்சமாய் நினைத்துப் போகிற போக்கில் கருத்துத் தெரிவித்திருக்கும் சிங்கள அதிபர் கோத்தபயவின் நடவடிக்கை எதனாலும் ஏற்றுக்கொள்ளவே முடியாத அரசப்பயங்கரவாதமாகும்.

சிதைந்த நம்பிக்கை

சிதைந்த நம்பிக்கை

காணாமல் போன தங்களது உறவுகளைக் கேட்டு நெஞ்சம் முழுக்கத் தவிப்போடும், நித்தமும் கண்ணீர் பெருக்கோடும் கடந்த பத்தாண்டுகளாக ஈழத்து வீதிகளில் இரவு பகல் எனப் பாராது, மழை, வெயிலைப் பொருட்படுத்தாது போராடி வந்திருக்கிறார்கள். அவர்களது இறுதி நம்பிக்கையை மொத்தமாகச் சிதைத்திருக்கிறது கோத்தபயவின் இந்த அறிவிப்பு. இருபதாயிரம் தமிழின மக்களைத் துடிக்கத் துடிக்கக் கொலைசெய்து அதை அறிவித்தும் முடித்திருக்கிற சிங்கள அரசோடு, இனி தமிழர்கள் எவ்வாறு இணைந்து வாழ்வார்கள் என்கின்ற கேள்வியைச் சர்வதேசச் சமூகத்தின் மனசாட்சியிடம் தமிழர்கள் நாங்கள் அறச்சீற்றத்தோடும், உள்ளக்குமுறலோடும் எழுப்புகிறோம்.

ஆறா வன்மம்

ஆறா வன்மம்

இதன்பிறகும்கூட, இந்தியப் பெருநாடும், சர்வதேசச்சமூகமும் எங்களுக்கான நீதியைப் பெற்றுத்தராமல் மௌனம் சாதிக்குமானால் வரலாற்றுப் பெரும் பழியைச் சுமக்க நேரிடும். எத்தனை காலங்கள் கடந்தாலும் இனி தமிழனாகப் பிறக்கக்கூடிய ஒவ்வொரின் மனதிலும், சிங்கள இனவாத அரசினால் படுகொலை செய்யப்பட்ட தமிழின இளைஞர்களின் இழப்பு பெரும் காயமாகத் தேங்கியிருக்கும். மாபெரும் வலியை தமிழினத்திற்கு அளித்த சிங்கள அரசு இந்தப் பூமிப்பந்து முழுக்கப் பரந்து வாழ்கிற 12 கோடி தமிழ்த்தேசிய இனத்தின் நெஞ்சினுள்ளும் ஆறா வன்மத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

துயரமும் வலியும்

துயரமும் வலியும்

இந்திய பெருநிலப்பரப்பில் 8 கோடி தமிழர்கள் வாக்குச்செலுத்தி, வரி செலுத்தி இந்திய நாட்டின் விடுதலை முதற்கொண்டு அனைத்திலும் பங்கெடுத்து நாட்டின் இறையாண்மையை மதித்துச் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்டு இந்த நாட்டின் குடிமக்களாகக் காலங்காலமாக வாழ்ந்து வருகிறோம். இருபதாயிரம் தமிழர்களைக் கொன்று குவித்ததை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் வழங்கி இருக்கிற இன்றைய அறிவிப்பு அத்தகைய தாயகத்தமிழர்கள் மத்தியில் பெரும் துயரத்தையும், வலியையும் ஏற்படுத்தி இருக்கிறது.

பொதுவாக்கெடுப்பு நடத்துக

பொதுவாக்கெடுப்பு நடத்துக

ஆகவே, மத்திய அரசு தமிழர்களது உணர்வினையும், போராட்டத்தினையும் மதித்து இலங்கையுடனான உறவை முறித்துக்கொண்டு தனது வெளியுறவுக்கொள்கையை மாற்றியமைக்க வேண்டுமெனவும், சிங்கள அரசு செய்தத் திட்டமிட்ட தமிழினப்படுகொலையைப் பன்னாட்டு நீதி விசாரணைக்கு உட்படுத்த சர்வதேச அழுத்தம் தர வேண்டுமெனவும், பொது வாக்கெடுப்பை ஈழத்தமிழ்ச் சொந்தங்களிடம் நடத்தி தனித்தமிழீழம் அமைவதற்கான முன்னெடுப்பினை செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன். இதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், இந்தியக் குடிமகன் எனும் உணர்வே அற்றுப்போய்த் தீரா வன்மமும், ஆறா கோபமும் தமிழ் இளைய தலைமுறைப்பிள்ளைகளின் நெஞ்சிலே தங்கி அது பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக்கூடுமென எச்சரிக்கிறேன்.

இவ்வாறு சீமான் கூறியுள்ளார்.

English summary
Naam Tamilar Chief-Co ordinator Seeman has condemend that Srilanka President Gotaba Rajapaksa's staement on Missing 20,000 Tamils were died in war.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X